Published : 20 Jun 2018 09:34 AM
Last Updated : 20 Jun 2018 09:34 AM

குடிசைகளை அகற்றும் அரசு தனியார் நிறுவன ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றாதது ஏன்?- சமூக ஆர்வலர் மேதா பட்கர் கேள்வி

ஏழைகளின் குடிசைகளை அப்புறப்படுத்தும் தமிழக அரசு கூவம், அடையாற்றை ஆக்கிரமித்துள்ள தனியார் நிறுவன கட்டிடங்களை அகற்றாதது ஏன் என சமூக ஆர்வலர் மேதா பட்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

சென்னை நகரின் வளர்ச்சியில் குடிசைப்பகுதி மக்களின் உழைப்பு முக்கியமானது. ஆனால், ஆற்றங்கரை ஓரத்தை ஆக்கிரமித்துள்ளார்கள் என்று கூறி ஆயிரக்கணக்காண குடும்பங்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட கூவம், அடையாற்றின் கரைகளை விதிகளை மீறி ஆக்கிரமித்துள்ள நிறுவனங்களும் காரணம். ஆனால், அந்த நிறுவனங்களின் கட்டிடங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காதது ஏன்?

குடிசைப்பகுதிகளில் வசிப்போருக்கு வழங்கப்படும் மாற்று இடங்களும் நகருக்கு வெளியே உள்ளன. இதனால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். ஏழைகளையும் உள்ளடக்காத நகரத்தின் உண்மையான வளர்ச்சி அல்ல. தூத்துக்குடியில் மாசு ஏற்படுத்தி வரும் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மக்கள் 100 நாட்களாக போராடியபோது அரசு கண்டுகொள்ளவில்லை, நூறாவது நாள் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். முதல்வர் பழனிசாமி மக்கள் போராட்டங்களை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். சமூக ஆர்வலர்களின் கைது நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும். இவ்வாறு மேதா பட்கர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x