Published : 12 Jun 2018 08:20 PM
Last Updated : 12 Jun 2018 08:20 PM

நீட் தேர்வில் மாணவிகள் தற்கொலையில் அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள்: கட்சித் தலைவர்களுக்கு நீதிபதி கண்டனம்

 நீட் தேர்வில் தோல்வியுறும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளாமல் இருக்க முன் கூட்டியே அறிவுரை வழங்காமல் இறந்த பின்னர் கண்ணீர் வடிக்கிறார்கள், மாணவர்கள் தற்கொலை சம்பவத்தில் அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள் என்று உயர் நீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மருத்துவப் படிப்பில் இடம் கோருவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் கிருத்திகா என்பவர் கடந்த ஆண்டு தொடர்ந்த வழக்கை நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்து வந்தார். அந்த சமயத்தில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி, அதில் ஏற்பட்ட தோல்வியால் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார்.

நீட் தேர்வால் ஏற்படும் மரணங்களைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், தேர்வுக்கு முன்பாக உரிய பயிற்சிகள் அளிக்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல உத்தரவுகளை நீதிபதி கிருபாகரன் பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில் நீட் தேர்வு தொடர்பாக கடந்த ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை தமிழக அரசு இதுவரை நிறைவேற்றவில்லை என்றும், அதனால் மாணவிகள் பிரதீபா, சுபஸ்ரீ ஆகியோர் தற்கொலை செய்து கொண்டதாக கூறி அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வழக்கறிஞர் சூரியபிரகாசம் தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன் இன்று விசாரணைக்கு வந்ததது. அப்போது அரசுத் தரப்பில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் மணிசங்கர் ஆஜராகி பதிலளித்தார். அவரது பதிலுரையில் மாணவர்களுக்கு நீட் தேர்வு சம்பந்தமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், தேர்வுகளை மாணவர்கள் எளிதாக அணுக பல்வேறு முயற்சிகளை அரசு படிப்படியாக எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், மாணவிகள் எதிர்பாராத விதமாக தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் நடைபெறுகிறது என்றும், இதற்கு அரசு தான் காரணம் என்ற குற்றச்சாட்டை ஏற்க முடியாது என்றும் வாதிட்டார்.

அப்போது நீதிபதி கிருபாகரன் குறுக்கிட்டு, மாணவர்களின் தற்கொலை சம்பவங்களை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள் என அரசியல் கட்சிகளுக்கு கண்டனம் தெரிவித்தார்.

மேலும், மாணவர்களுக்கு முன்கூட்டியே அறிவுரை வழங்காமல் இறந்த பிறகு கண்ணீர் வடிப்பது தேவையற்றது என்றும், மாணவர்கள் தற்கொலை சம்பவங்களுக்கு அரசை மட்டும் குறை சொல்லக் கூடாது, இதை தடுக்க வேண்டியது சமுதாயத்தில் உள்ள அனைவரின் பொறுப்பு எனவும் தெரிவித்தார்.

மாணவர்கள் தற்கொலையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 2 வாரத்திற்குள் பதில் அளிக்கவும், பள்ளி ஆசிரியர்களை வைத்தே மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்க முடியுமா என்பது குறித்து பதிலளிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஜூன் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x