Published : 21 Jun 2018 09:34 AM
Last Updated : 21 Jun 2018 09:34 AM

பியூஸ் மனுஷ் நக்சலைட்டா?- போலீஸுக்கு சகோதரி கேள்வி

சேலம்-சென்னை 8 வழி பசுமைச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த சேலம் சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது சகோதரி ஊர்வசி லூனியா கோவையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

பியூஸ் மனுஷை கைது செய்தது தொடர்பாக போலீஸார் முறையாக தகவல் தெரிவிக்கவில்லை. கைது செய்த பின்னர், அவரை வழக்கறிஞர்கள் சந்திக்க அனுமதிக்கவில்லை.

சேலம்-சென்னை பசுமை வழிச் சாலை தொடர்பாக, மக்கள் நலன் சார்ந்த கருத்துகளைத்தான் பியூஸ் மனுஷ் தெரிவித்துள்ளார். யாரையும் தூண்டிவிடவில்லை. தூய்மையான காற்று, தண்ணீர், நிலத்துக்காக போராடுபவர்களை நக்சலைட்டுகள், மாவோயிட்டுகள் என்று முத்திரை குத்துவது சரியா?

சேலம்-சென்னை 8 வழிச்சாலை குறித்து முழுமையாக ஆய்வு செய்யவில்லை. பியூஸ் மனுஷை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய போலீஸார் முயற்சிக்கிறார்கள். இந்த சாலை திட்டத்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, தபெதிக பொதுச் செயலர் கு.ராமகிருட்டிணன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி செயலர் திருஞானம், சுற்றுச்சூழல் ஆர்வலர் சிவா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x