Published : 19 Jun 2018 03:46 PM
Last Updated : 19 Jun 2018 03:46 PM

பசுமைவழிச் சாலை விவகாரம்; தமிழக அரசு அடக்குமுறையைக் கையாள்கிறது: முத்தரசன் கண்டனம்

சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பை வெளிப்படுத்துபவர்கள் மீது தமிழக அரசு அடக்குமுறையைக் கையாள்வது கடும் கண்டனத்திற்குரியது என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முத்தரசன் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழக அரசு ஜனநாயகத்திற்கு புறம்பான முறையில் கடும் அடக்கு முறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது கடும் கண்டனத்திற்குரியதாகும்.

விவசாய விளைநிலங்களை அபகரித்து சேலம் - சென்னை எட்டு வழிச் சாலையை அமைத்திட அரசு முடிவு செய்துள்ளது. இதனால் தங்களின் வாழ்வாதாரம் அடியோடு பறிபோவதைக் கண்டு, விவசாயிகள் தங்களின் எதிர்ப்பை ஜனநாயக முறையில் தெரிவிக்கின்றனர். அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

ஜனநாயகத்தின் மீது அரசுக்கு நம்பிக்கை இருக்குமேயானால் எதிர்ப்பு தெரிவிப்போரின் கருத்துகளைக் கேட்டு தீர்வு சொல்லவேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு உள்ளது. மாறாக அடக்குமுறை மூலம் தீர்வுகாணக் கூடிய வகையில் விவசாயிகள் அச்சுறுத்தப்பட்டு கைது செய்யப்படுகின்றனர்.

தூத்துக்குடியில் தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொள்வதும், பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அச்சுறுத்தப்படுவதும் கடும் கண்டனத்திற்குரியது.

தமிழக அரசு சர்வாதிகாரப் பாதையில் செல்லாமல், ஜனநாயக நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட வேண்டும். அடக்குமுறை நடவடிக்கைகள் ஒரு போதும் வெற்றி பெறாது என்பதனை உணர்ந்து அப்பாவி பொதுமக்கள், விவசாய அமைப்பின் நிர்வாகிகள் மீது தொடுத்துள்ள அடக்குமுறை நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும்” என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x