Published : 03 Jun 2018 08:00 AM
Last Updated : 03 Jun 2018 08:00 AM

பிணையில் விடுவிக்க முடியாத குற்ற வழக்குகளில் ஜாமீன் கோருவோர் கீழமை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம்

பிணையில் விடுவிக்க முடியாத குற்ற வழக்குகளில் ஜாமீன் கோருவோர் சம்பந்தப்பட்ட கீழமை நீதிமன்றங்களில் ஆஜராகவோ அல்லது சரணடையவோ வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.

தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பிரியா என்பவர் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், அந்த நிதி நிறுவனத்தின் ரகசியங்களை வெளியிட்டதாகவும், நிறுவனத்தின் நிதியை அவர் கையாடல் செய்ததாகவும், அந்நிறுவனத்தின் செயலாளர் சவுந்தர்ராஜன் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் பிரியாவும், அவரது தாயார் ஜூலியட் பெர்னார்டும் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இவர்களது மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜாமீன் பெற கீழமை நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தி மனுவை தள்ளுபடி செய்தது.

இதன் அடிப்படையில் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவும் தள்ளுபடியானது. முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி பிரியாவும், அவரது தாயாரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், “குற்றவியல் நடைமுறைச் சட்டம் 437 (1)-வது பிரிவின்படி பிணையில் விடுவிக்க முடியாத குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் ஜாமீன் கோரும்போது சம்பந்தப்பட்ட கீழமை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவோ அல்லது சரணடையவோ வேண்டும். ஆனால், மனுதாரர்கள் இருவரும் கீழமை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவில்லை. அதனால் அவர்களது மனுவை நிராகரித்து கீழமை நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவு சரியானது” என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x