Published : 17 Jun 2018 11:33 AM
Last Updated : 17 Jun 2018 11:33 AM

ட்விட்டரில் தங்களை இழிவுபடுத்தியதாக கூறி நடிகை கஸ்தூரி வீட்டை முற்றுகையிட்ட திருநங்கைகள்

ட்விட்டரில் தங்களை இழிவுபடுத்தியதாக கூறி நடிகை கஸ்தூரியின் வீட்டை திருநங்கைகள் நேற்று முற்றுகையிட்டனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 14ம் தேதி 18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்க வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பளித்தார். மற்றொரு நீதிபதியான சுந்தர், எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது என தனது தீர்ப் பில் குறிப்பிட்டார். 2 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு அளித்திருந்தனர். இந்த தீர்ப்பு குறித்து பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்திருந்தனர். நடிகை கஸ்தூரியும் ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் தனது கருத்தை பதிவு செய்திருந்தார். பின்னர், அதை நீக்கிவிட்டார்.

இந்நிலையில், ட்விட்டரில் கஸ்தூரி பதிவு செய்திருந்த கருத்துகள் தங்களை இழிவு படுத்துவதாக திருநங்கைகள் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திராவிடர் விடுதலை கழகத்தினர் மதுரை காவல் ஆணையரிடம் நேற்று புகார் அளித்தனர். இந்நிலையில் சிநேகிதி அமைப்பைச் சேர்ந்த ரேணுகா தேவி என்பவர் தலைமையில் 20க்கும் மேற்பட்ட திருநங்கைகள் நேற்று ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகை கஸ்தூரியின் வீட்டை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து தேனாம்பேட்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x