Published : 30 May 2018 05:16 PM
Last Updated : 30 May 2018 05:16 PM
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நடித்த ‘சூரியகாந்தி’, சிவாஜி கணேசன் நடித்த ‘இமயம்’, ரஜினிகாந்த் நடித்த ‘பொல்லாதவன்’, கமல்ஹாசன் நடித்த ‘சிம்லா ஸ்பெஷல்’ உட்பட ஏராளமான வெற்றிப்படங்களை இயக்கியவர் பழம் பெரும் திரைப்பட இயக்குநர் முக்தா வி.சீனிவாசன் (88). கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த முக்தா சீனிவாசன், செவ்வாய்க்கிழமை இரவு காலமானார். இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
"முக்தா சீனிவாசன் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தம் அடைந்தேன்.
முக்தா சீனிவாசன் முதலாளி, பொம்மலாட்டம், அந்தமான் காதலி, கீழ் வானம் சிவக்கும், பரிட்சைக்கு நேரமாச்சு உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சூரியகாந்தி திரைப்படத்தை இயக்கிய பெருமை முக்தா சீனிவாசனை சாரும். மேலும், பல திரைப்படங்களையும் முக்தா சீனிவாசன் தயாரித்துள்ளார்.
முக்தா சீனிவாசன் இயக்குநர், தயாரிப்பாளர், வசனகர்த்தா, எழுத்தாளர் போன்ற பன்முகத் திறமை கொண்டவர். அவர் திரைப்படத் துறைக்கு ஆற்றிய சேவைக்காக தேசிய விருது, தமிழ்நாடு அரசின் மாநில விருதுகள் போன்ற பல்வேறு விருதுகளை பெற்ற பெருமைக்குரியவர் ஆவார்.
அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவரும், திரைத்துறையில் தனக்கென தனி முத்திரை பதித்தவருமான முக்தா சீனிவாசனின் மறைவு, தமிழ் திரையுலகிற்கு ஒரு பேரிழப்பாகும்.
முக்தா சீனிவாசனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்"
மு.க.ஸ்டாலின், செயல் தலைவர், திமுக:
“பிரபல திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசன் அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வேதனையுற்றேன். தஞ்சை தரணியில் பிறந்து, நெஞ்சை அள்ளும் விதத்தில் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கிய அவரது மறைவிற்கு திமுக தலைவர் கருணாநிதி சார்பிலும், எனது சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகத்தினருக்கும் எனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலில் பொதுவுடைமைக் கட்சியிலும், பிற்காலத்தில் காங்கிரஸ் பேரியக்கத்திலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். திரையுலகம், எழுத்துத்துறை, அரசியல் என்று அனைத்துத் துறையிலும் பன்முகத்திறமை கொண்டவராக விளங்கிய முக்தா சீனிவாசனின் மறைவு திரையுலகத்திற்கும், குறிப்பாக இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கும் பேரிழப்பாகும்”
திருநாவுக்கரசர், தலைவர், தமிழக காங்கிரஸ்:
“தமிழகத்தின் தலைச்சிறந்த திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநரும், எழுத்தாளருமான முக்தா வி. சீனிவாசன் அவர்களின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும், தேனையும் அடைந்தேன். காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு பல்வேறு பொறுப்புகளை ஏற்று காங்கிரஸ் பேரியக்க வளர்ச்சிக்காக சிறப்புடன் செயல்பட்டவர். முக்தா சீனிவாசனின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை எனது சார்பிலும், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பிலும் துயரத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்”.
பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர்:
“பிரபல இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் சிறந்த எழுத்தாளருமான முக்தா சீனிவாசன் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன். சிறந்த தேசபக்தியை கொண்ட இயக்குநரை தமிழ் திரையுலகம் இழந்திருப்பது மிகுந்த வேதனையை கொடுக்கிறது.
அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் சினிமா துறையை சேர்ந்த அனைவரின் துயரிலும் பங்கு கொள்கிறேன். அவரது ஆன்மா நற்கதியடைய எல்லாம் வல்ல அன்னை சக்தியை பிரார்த்திக்கின்றேன்”.
ஜி.கே.வாசன், தலைவர், தமாகா:
“முக்தா சீனிவாசன் கலைத்துறையிலும், பொது வாழ்விலும் மிகச்சிறப்பாக பணியாற்றிய மூத்த பிரதிநிதி ஆவார். அவர் காலமானார் என்பது மிகவும் வருத்தத்துக்கு உரியது. மறைந்த மூப்பனாரும், முக்தா சீனிவாசனும் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, இருவரும் பள்ளித்தோழர்கள். பொது வாழ்விலே மூப்பனாரின் தலைமையை ஏற்று தமாகாவில் மிகச்சிறப்பாக மக்கள் பணி மற்றும் இயக்கப்பணி ஆற்றியவர்.
தமிழ் திரைப்பட வரலாற்றில் மிக முக்கியப்பங்கு வகித்த முக்தா சீனிவாசன் அவர்களது மறைவு கலைத்துறையினருக்கும் மற்றும் பொது வாழ்வில் இருப்போருக்கும் பேரிழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், கலைத்துறையினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்”.
சரத்குமார், தலைவர், சமத்துவ மக்கள் கட்சி:
”பழம்பெரும் திரைப்பட இயக்குநரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை உருவாக்கியவரும், தமிழ் மாநில காங்கிரஸ் ஆரம்பித்த போது பொதுச்செயலாளராக பதவி வகித்தவரும், எழுத்தாளருமான முக்தா சீனிவாசன் அவர்கள் உடல் நலக்குறைவால் உயிரிழந்த செய்தி வருத்தமளிக்கிறது. சுமார் 350 சிறுகதைகள் எழுதிய இவரது படைப்பாற்றல் திறனும் வியக்கத்தக்கது. சான்றோர் பெருமக்களின் சாதனைகள் மனதில் நின்று போற்றத்தக்கவை. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்”.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT