Published : 06 May 2018 10:20 AM
Last Updated : 06 May 2018 10:20 AM
மின்வாரிய தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
கோவை, ஈரோடு, நாமக்கல், நீலகிரி, சேலம் ஆகிய மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் கிருஷ்ணகிரி, மதுரையிலும் கடந்த சில நாட்களாக பரவலாக கோடை மழை பலத்த காற்று, இடி, மின்னலுடன் பெய்தது. இதனால் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து மின் கம்பிகள் அறுந்ததாலும் மின்கம்பங்கள் சாய்ந்ததனாலும் மின்தடை ஏற்பட்டது.
இதனால் கடந்த 30-ம் தேதி முதல் கோவை மண்டலத்தில் உள்ள கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் 416 மின்பாதைகளுக்கும், 19 மின்மாற்றிகளுக்கும் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. ஈரோடு மண்டலத்தில் உள்ள ஈரோடு, நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தில் 173 மின்பாதைகளுக்கும், 6 மின்மாற்றிகளுக்கும் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. அதேபோல், மதுரை மண்டலத்திலுள்ள மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டத் தில் 200 மின்பாதைகளுக்கும், 21 மின்மாற்றிகளுக்கும் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது.
பழுதடைந்த மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகள் உடனுக்குடன் சரி செய்யப்பட்டு சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. பருவநிலை காரணமாக மின் சாதனங்களில் ஏற்படும் பழுதினால் ஓரிரு இடங்களில் மின்தடை ஏற்பட்டதே தவிர மின்வெட்டு என்பது தமிழ்நாட்டில் 2015 ஜூன் 5-ம் தேதி முதல் அறவே இல்லை என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT