Published : 20 May 2018 11:11 AM
Last Updated : 20 May 2018 11:11 AM
மாதவரம் லாரி உரிமையாளர் கொலை வழக்கு தொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்.
மாதவரம் மஹாவீர் நகரை சேர்ந்தவர் பாபு (50). லாரி உரிமையாளரான இவர், அதே பகுதியில் உள்ள தனது நண்பரான சிவா என்பவருக்குச் சொந்தமான பெட்ரோல் பங்கில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது, வஜ்ரவேல் நகரை சேர்ந்த சுரேந்தர் என்பவர் தனது மனைவியுடன் பைக்கில் பெட்ரோல் பங்குக்கு வந்துள்ளார். அவர் மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அங்கு ஏற்கனவே நின்றிருந்த பாபுவுக்கும், சுரேந்தருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. திரும்பிச் சென்ற சுரேந்தர் தனது நண்பர்களை அழைத்து வந்து பாபுவை கடுமையாக தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த பாபு, மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து மாதவரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். பாபு கொலை வழக்கு தொடர்பாக சுரேந்தரின் நண்பர்களான மாதவரத்தைச் சேர்ந்த ஹைதர்அலி (20), அதே பகுதியைச் சேர்ந்த ஜோதீஸ்வரன், அசோக் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். சுரேந்தர் மற்றும் அவரது கூட்டாளியான கார்த்திக் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT