Published : 13 May 2018 10:17 AM
Last Updated : 13 May 2018 10:17 AM

இளைஞர் அணி செயலாளர்களுடன் ரஜினி இன்று ஆலோசனை

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த ரஜினி மக்கள் மன்றத்தின் இளைஞர் அணி மாவட்டச் செயலாளர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் இன்று ஆலோசனை நடத்துகிறார். வலுவான அடித்தள கட்டமைப்பை உருவாக்கிய பிறகே கட்சியை தொடங்க வேண்டும் என்பதில் நடிகர் ரஜினிகாந்த் உறுதியாக இருப்பதாக தெரிகிறது. அதற்காக, தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றம் என பெயர் மாற்றம் செய்து அதற்கு மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமித்துள்ளார். கடந்த 4 மாதமாக நடைபெற்று வந்த நிர்வாகிகள் நியமன பணிகள் முடிவடைந்த நிலையில், தற்போது ஒவ்வொரு அணி நிர்வாகிகளையும் தனித் தனியாக நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார்.

அதன்படி, கடந்த 10-ம் தேதி அனைத்து மாவட்ட செயலாளர்களையும் தனது போயஸ் கார்டன் இல்லத்துக்கு அழைத்து ஆலோசனை நடத்தினார் ரஜினிகாந்த். அப்போது, மன்றத்தின் கிளை அமைப்புகளை உருவாக்கும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார். இந்நிலையில், இளைஞர் அணி மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இதுதொடர்பாக ரஜினி மக்கள் மன்றத்தின் செயலாளர் ராஜூ மகாலிங்கம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகம் மற்றும் புதுச் சேரி மாநிலங்களைச் சேர்ந்த ரஜினி மக்கள் மன்றத்தின் இளைஞர் அணி மாவட்டச் செயலாளர்களை ரஜினிகாந்த் வரும் 13-ம் தேதி (இன்று) காலை 10.30 மணிக்கு சந்திக்க உள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்காக அனைத்து மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர்களும் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்துக்கு இன்று வர வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x