Published : 10 May 2018 07:54 AM
Last Updated : 10 May 2018 07:54 AM
அருப்புக்கோட்டை உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் குறித்து முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது. இவ்விஷயத்தில் ஆளுநரின் அதிகாரத்தில் தலையிட முடியாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி, தனது மாணவிகள் சிலரை பாலியல்ரீதியாக தவறாக வழிநடத்தியதாக எழுந்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் மதுரை காமராசர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதே சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானத்தை விசாரணை அதிகாரியாக நியமித்து பல்கலைக்கழகங்களின் வேந்தரான தமிழக ஆளுநர் உத்தரவிட்டார்.
இந்நிலையில் சந்தானம் ஆணையத்தை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் வழக்கறிஞர் செல்வகோமதி பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி மீது பணியிடங்களில் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இந்த சட்டப்படி பணியாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தால் அது தொடர்பாக கல்லூரி அளவிலான உள்ளூர் புகார் குழுவும், அந்தக்குழு இல்லாதபோது மாவட்ட அளவிலான குழுவும் விசாரிக்க வேண்டும். ஆனால் இந்த விவகாரத்தில் கல்லூரி அளவிலான புகார் குழுவும், மாவட்ட அளவிலான புகார் குழுவும் அமைக்கப்படவில்லை.
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பாலியல் வன்கொடுமைகளை தடுப்பது தொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு பல்வேறு விதிகளை வகுத்துள்ளது. அந்த விதிகளையும் நிர்மலாதேவி விவகாரத்தில் பின்பற்றவில்லை. பல்கலைக்கழக சட்டப்படி விசாரணை ஆணையம் அமைப்பதற்கு பல்கலைக்கழக வேந்தருக்கு அதிகாரம் கிடையாது. எனவே சந்தானம் ஆணையம் விசாரணையை ரத்து செய்தும், நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக உள்ளூர் புகார் குழு விசாரிக்கவும் உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
உள்ளூர் புகார் குழு
இந்த மனு, நீதிபதிகள் கோவிந்தராஜன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஆளுநர் நியமித்த சந்தானம் விசாரணை ஆணையத்துக்கு தடை விதிக்க முடியாது. பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் விசாரணைக் குழு அமைக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. அந்த அதிகாரத்தில் தலையிட முடியாது. அதே நேரத்தில் உள்ளூர் புகார் குழு விசாரணைக்கு பரிசீலிக்கலாம் என்று சொல்லி மனுவை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT