Published : 12 May 2018 09:46 AM
Last Updated : 12 May 2018 09:46 AM

வெளிமாநிலத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 11 பேர் கைது: காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி தகவல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குழந்தை கடத்துபவர்கள் என நினைத்து வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குழந்தை கடத்துபவர்கள் என நினைத்து வெளிமாநிலத் தொழிலாளர்களைத் தாக்கிய சம்பவம் 3 இடங்களில் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த வெளிமாநிலத் தொழிலாளர் ஒருவரை ஒரத்தி பகுதியில் பொதுமக்கள் கண்டுள்ளனர். போலீஸார் ஏற்படுத்திய விழிப்புணர்வின் காரணமாக அவர்கள் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். போலீஸார் உடனடியாகச் சென்று அவரை அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

வெளிமாநிலத் தொழிலாளர்கள் குழந்தை கடத்துவதாகத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பலர் வதந்தி பரப்பி வருகின்றனர். சிலர் தங்களுக்கு வரும் செய்தியை மற்றவர்களுக்கு அப்படியே விளையாட்டாக அனுப்பலாம். சிலர் திட்டமிட்டே வதந்தியைப் பரப்புவர். அவ்வாறு திட்டமிட்டு வதந்தியைப் பரப்புவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தங்கியுள்ள வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு அவர்கள் பணி செய்யும் நிறுவனங்கள் அடையாள அட்டை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருவள்ளூரில் 3 பேர் கைது

திருவள்ளூர் மாவட்டத்தில், குழந்தைகளைக் கடத்த வந்ததாகக் கூறி வடமாநில இளைஞர் உள்ளிட்ட இருவரைத் தாக்கியது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பழவேற்காடு பகுதியில் மனநோயாளி ஒருவரை, கடந்த 9-ம் தேதி இரவு குழந்தை கடத்த வந்ததாக கூறி, பொதுமக்கள் கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளனர்.

நேற்று முன் தினம், பூண்டி ஏரியில் குளித்துக் கொண்டிருந்த சிறுவர்களிடம் பேசிக் கொண்டிருந்த வடமாநில இளைஞர் தாக்குதலுக்கு உள்ளானார். அதுபோல், கடந்த சில நாட்களுக்கு முன்பு பொன்னேரி அருகே உள்ள இருளிபட்டு கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரை, குழந்தை கடத்த வந்தவர் என நினைத்து, பொதுமக்கள் கடுமையாக தாக்கினர். இந்தச் சம்பவங்கள் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் பூண்டி ஏரி பகுதியில் வடமாநில இளைஞரைத் தாக்கியது தொடர்பாக பூண்டி இருளர் குடியிருப்பைச் சேர்ந்த குமார்(24), மெதூரில் லட்சுமணனை தாக்கியது தொடர்பாக, மெதூர் பகுதியைச் சேர்ந்த சரண்ராஜ், மகேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x