Last Updated : 14 May, 2018 11:21 AM

 

Published : 14 May 2018 11:21 AM
Last Updated : 14 May 2018 11:21 AM

எஸ்.வி.சேகரைப் பிடித்துக் கொடுப்பது என் வேலையில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்

 போலீஸாரால் தேடப்படும் எஸ்.வி.சேகரை விழா ஒன்றில் சந்தித்தேன். ஆனால் அவரை போலீஸிடம் பிடித்துக் கொடுப்பது என் வேலையில்லை என்று மத்துய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

விழுப்புரத்தில் சமதர்ம எழுச்சி மாநாட்டுப் பந்தல் கால்கோள் விழாவில் பங்கேற்ற மத்திய நிதி, கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"எஸ்.சி. சமுதாய மக்கள் பல்வேறு அரசியல் கட்சிகளால் பயன்படுத்தப்பட்டுள்ளனர். பாஜக மட்டுமே இம்மக்களுக்கு சதவீதம் வகுத்து இந்தியாவில் அதிக எம்.பி., எம்எல்ஏ பதவிகளை வழங்கியுள்ளது. வரும் 27-ம் தேதி விழுப்புரத்தில் சமதர்ம எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது.

கர்நாடகா அணை நிரம்பினாலும் தண்ணீர் கொடுக்கவில்லை. அணையைத் திறக்காவிட்டால் உடையும் என்ற சூழல் வரும்போது தண்ணீரைத் திறந்துவிட்டார்கள். காவிரி தண்ணீர் தரவேண்டாம் என்றாலும் காங்கிரஸ் அரசு மகிழ்ச்சி அடையும். காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைந்தால் மட்டுமே காவிரி நீர் தமிழகத்திற்கு வரும்.

மீண்டும் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் கர்நாடகா மட்டுமல்ல, தமிழகத்திற்கும் சனி பிடிக்கும். ஆனால் அது நடக்காது. பாஜக மட்டுமே காவிரி பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு அளிக்க விரும்புகிறது.

போலீஸாரால் தேடப்படும் எஸ்.வி.சேகர் என்னை வந்து சந்திக்கவில்லை. ஒரு விழாவிற்குச் செல்லும்போது அங்கு எதிரே வந்த அவரைச் சந்தித்தேன். அவரைக் கைது செய்யவேண்டியது போலீஸ் வேலை. அவரை பிடித்துக் கொடுப்பது என் வேலையில்லை.

தமிழ்நாட்டிற்கு விமோசனம் கிடைக்க பல்வேறு முயற்சிகளை குருமூர்த்தி செய்துவருகிறார். ரஜினி பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பது அவரின் சொந்தக் கருத்து. கட்சியின் கருத்து இல்லை.

பாஜக கூட்டணிக்கு ஏங்கிக் கிடக்கவில்லை. இது கூட்டணி காலம். அந்தக் காலத்தில் என்னென்ன செய்ய முடியுமோ அதைச் செய்வோம்" என்று கூறினார்.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x