Last Updated : 02 May, 2018 08:25 AM

 

Published : 02 May 2018 08:25 AM
Last Updated : 02 May 2018 08:25 AM

வணிகர்கள் உரிமம் பெறுவது கட்டாயம்; உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இதுவரை 4.5 லட்சம் கடைகள் பதிவு- பதிவு செய்யாதவர்களுக்கு நோட்டீஸ்

உணவு பாதுகாப்பு உரிமம், பதிவுச்சான்று பெறுவது கட்டாயமாக்கப்பட்டதால், தமிழகம் முழுவதும் இதுவரை 4.5 லட்சம் உணவு வணிகர்கள் உரிமம் பெற்றுள்ளனர். அவ்வாறு உரிமம் பெறாதவர்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது.

உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிமம், பதிவுகள் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி தள்ளுவண்டி உணவு கடைகள், சிறு, குறு வணிகர்கள், ஓட்டல்கள், 5 நட்சத்திர விடுதிகள் என உணவு வணிகம் செய்வோர் அனைவரும் உணவு பாதுகாப்பு உரிமம், பதிவு சான்றிதழை பெற வேண்டும்.

இதற்காக மாநில உணவு பாதுகாப்புத்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

சிறப்பு முகாம்கள்

அதோடு, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன்காரணமாக, இதுவரை தமிழகம் முழுவதும் மொத்தம் 4,49,947 வணிகர்கள் உரிமம் பெற்றுள்ளனர்.

இதுதொடர்பாக மாநில உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “தமிழகம் முழுவதும் மொத்தம் 5,81,249 பேர் உணவு வணிகம் செய்து வருகின்றனர். இதில் தற்போதுவரை 74,156 பேர் உரிமமும், 3,75,791 பேர் பதிவுச் சான்றிதழும் பெற்றுள்னர்.

வருவாய்க்கு ஏற்ப கட்டணம்

ஆண்டுக்கு ரூ.12 லட்சத்துக்கு குறைவாக வணிகம் செய்யும் உணவு வணிகர்கள் ரூ.100 செலுத்தி பதிவுச் சான்றிதழை அந்தந்த பகுதி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

ஆண்டுக்கு ரூ.12 லட்சத்துக்கும் மேல் வணிகம் செய்யும் சிறு வணிகர்கள், உணவு விடுதிகள், உணவு தயாரிப்பாளர்கள், 3 நட்சத்திர விடுதிகள் தங்களின் ஆண்டு வருவாய்க்கு ஏற்ப கட்டணம் செலுத்தி மாவட்ட நியமன அலுவலரிடம் உரிமம் பெற்றுக் கொள்ளலாம்.

இணையதளத்தில் விண்ணப்பம்

இதற்கான விண்ணப்பங்களை www.foodlicensing.fssai.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். அதே இணையதளத்தில், வணிகர்கள் User name, Password உருவாக்கி Login செய்து இணையதள வங்கி சேவை மூலமாகவும் கிரெடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்தியும் எளிதாக பணம் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.

நோட்டீஸ்

உரிமம், பதிவுச் சான்றிதழ் பெறத் தவறும் வணிகர்களுக்கு அந்தந்த மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி வருகின்றனர். இதை மீறியும் பதிவு செய்யாதவர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்படும்.

எனவே, இதுவரை பதிவு செய்யாத உணவு வணிகர்கள் உரிமம் பெறுவது தொடர்பான விவரங்களுக்கு அந்தந்த மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x