Published : 18 Apr 2018 09:22 AM
Last Updated : 18 Apr 2018 09:22 AM
இரவு ரோந்து செல்லும் போலீஸார் சந்தேக நபர்களை மிரட்டி பணம் பறிக்கும் செயல் அதிகரித்துள்ளதாக சென்னை காவல் ஆணையருக்கு நுண்ணறிவு பிரிவு போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையில் 12 காவல் மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு காவல் மாவட்டத்துக்கும் துணை ஆணையர் உயர் அதிகாரியாக இருப்பார். அவருக்கு மேல் அதிகாரிகள் இருப்பார்கள். காவல் மாவட்டங்களில் உள்ள போலீஸாரின் செயல்பாடு குறித்து நுண்ணறிவு பிரிவு போலீஸார், காவல் ஆணையருக்கு உளவு தகவல்களை சேகரித்து அவ்வப்போது அனுப்புவார்கள்.
அதன்படி, அடையார் காவல் மாவட்டத்தில் உள்ள 20 காவல் நிலையங்களில் பெரும்பாலான காவல் நிலையங்களில் உள்ள இரவு ரோந்து குற்றப்பிரிவு போலீஸார் இரவு ரோந்து பணிக்கு ஒழுங்காக செல்வது இல்லை. மேலும் சந்தேக நபர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று அவர்களை மிரட்டி பணம் பறிக்கும் செயல் அதிகரித்துள்ளது என சென்னை காவல் ஆணையருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக நீலாங்கரை, துரைப்பாக்கம், செம்மஞ்சேரி, கண்ணகி நகர் காவல் நிலைய போலீஸார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT