Published : 16 Apr 2018 05:28 PM
Last Updated : 16 Apr 2018 05:28 PM
தூத்துக்குடியில் திருமணம் முடிந்த கையோடு மணமக்கள் மணக்கோலத்துடன் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் குதித்தனர். அவர்களை பொதுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுத்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை முழுவதுமாக மூட வேண்டும் என்று போராட்டம் மாதக்கணக்கில் நடந்து வருகிறது. தூத்துக்குடி முழுவதும் பொதுமக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதே போல் தூத்துக்குடியில் உள்ள பனிமயமாதா ஆலயத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, இரண்டாவது நாளாக போராட்டம் நடைப்பெற்று வருகிறது. ஆலய வளாகத்தில் கருப்புக் கொடி பதாகைகளுடன் பொதுமக்கள் ஆவேசமாகப் போராடி வருகின்றனர்.
இதே பகுதியில் புதுத்தெருவில் வசிக்கும் ஜோசப் மற்றும் ஷைனி ஆகிய இருவருக்கும் அருகிலுள்ள திரு இருதய ஆலயத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த உடன் புதுமணத் தம்பதி இருவரும், வீட்டிற்குச் செல்லாமல் மணக்கோலத்தில் நேரடியாக பனிமயமாதா ஆலயத்தில் நடக்கும் போராட்டக் களத்திற்கு வந்தனர்.
மணக்கோலத்தில் தம்பதி வருவதைப் பார்த்த அப்பகுதியில் போராடும் பொதுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். போராட்டக் களத்தில் பொதுமக்களுடன் ஜோசப், ஷைனி இருவரும் கையில் பூச்செண்டு மற்றும் பதாகைகளுடன் கோஷமிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புது மாப்பிள்ளை ஜோசப், ''ஸ்டெர்லைட் ஆலை தலைமுறையைப் பாதிக்கும் ஒன்று. இதன் மூலம் பலருக்கும் கேன்சர் பரவுகிறது . ஆகையால் அதை எதிர்க்கிறோம். ஆகவே தான் திருமணம் முடிந்த கையோடு எதிர்ப்பைக் காட்ட இங்கு வந்தோம்'' என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT