Published : 24 Apr 2018 08:43 AM
Last Updated : 24 Apr 2018 08:43 AM
அமெரிக்க தூதரக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீ ஸார் கடுமையாக அவதிப்படுவதால், உயர் பாதுகாப்பு கோபுரம் அமைத்து தர கோரிக்கை விடுத் துள்ளனர்.
2012-ம் ஆண்டு அமெரிக்கா வைச் சேர்ந்த ஒருவர் நபிகள் நாயகம் பற்றி அவதூறாக படம் தயாரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது அமெரிக்கத் தூதரகம் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தால் அப்போது காவல் ஆணையராக இருந்த திரிபாதியும் இடமாற்றம் செய்யப்பட்டார். அதுமுதல் அமெரிக்க தூதரகம் அருகே கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட் டன.
தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா வாகனத்துடன் அதிரடிப்படையினரும் 24 மணி நேரம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தூதரகம் எதிரே உள்ள அண்ணா மேம்பாலத்தில் இருந்து தூதரகத்ததுக்குள் எதை யும் வீசிவிடக் கூடாது என்பதற்காக, மேம்பாலத்திலும் போலீ ஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தற்காலிக நிழல் கூண்டுகள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளன.
மழை, வெயில், பனி என எதுவாக இருந்தாலும் அவர் கள் பாலத்தின் மீதுதான் நிற்க வேண்டும். அவசரத்துக்கு ஒதுங்கக்கூட முடியாது. எப்போது எந்த அதிகாரி இந்த வழியாக கடந்து செல்வாரோ என்ற பயமும் இருக்கும்.
ஏ.கே.47 துப்பாக்கி பாதுகாப்பு
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள உதவி ஆய்வாளர் ஒருவர் கூறும்போது, “ஒரு ஆய்வாளர், 4 உதவி ஆய்வாளர்கள் தலைமையில் 50 போலீஸார் தினமும் அமெரிக்க தூதரக பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இதில் 3 பேர் ஏ.கே.47 ரக துப்பாக்கியும் 15 பேர் இயந்திர துப்பாக்கியும் வைத்திருப்பார்கள். ஆயுதப்படை பிரி வில் இருந்து தினமும் 30 பேர் பாதுகாப்பு பணிக்கு வருவார்கள். இதில், 16 பேர் அண்ணா மேம்பாலத்தில் சுழற்சி முறையில் நிறுத்தப்படுவார்கள். அமெரிக்க தூத ரக அதிகாரிகளுக்காக நாம் இவ்வளவு பாதுகாப்பு வசதிகள் செய்தாலும், தூதரக அதிகாரிகள் எங்களை மனிதனாகக் கூட மதிக்க மாட்டார்கள். எங்களுக்கு தண்ணீர் கூட கொடுக்க மாட்டார்கள். அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் ஆளுநருக்கும், காவல் ஆணையருக்கும் நேரடியாக பேசுவார்கள்” என்றார்.
மேம்பாலத்தில் பாதுகாப்பு பணி
அண்ணா மேம்பாலத்தில் பாதுகாப்புக்கு நின்ற போலீஸாரிடம் கேட்டபோது அவர்கள் கூறிய தாவது:
தினமும் ஒரு மணி நேரம் இங்கு வேலை பார்க்க வேண்டும். அதன் பிறகு வேறு நபர்கள் வந்து விடுவார்கள். எந்த வண்டி எங்கள் மீது மோதுமோ என்ற மரண பயத்தில்தான் ஒரு மணி நேரமும் நிற்க வேண்டும். எங்களை ஒட்டியவாரே வாகனங்கள் வேகமாக செல்வதால், தவறி கூட சாலையில் கால் வைத்து விட முடியாது.
மேலும், வாகனப் புகையை தொடர்ந்து சுவாசிக்க நேர்வதால் பலர் சுவாச நோய்தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். உச்சி வெயிலில் நிற்பது அதிலும் கொடுமையாக இருக்கும். இவா்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
இங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீஸாரின் கடினமான சூழ்நிலையை புரிந்த கொண்ட, காவல் இணை ஆணையராக இருந்த மனோகரன், சரவணா சூப்பர் ஸ்டோர் நிறுவனத்தாரிடம் பேசி, தற்காலிக கழிவறை, மேம்பாலத்தில் 4 நிழல் கூண்டுகள் அமைக்க ஏற்பாடு செய்து கொடுத்தார்.
பாலத்தில் நிற்கும் போலீஸாருக்கு பதிலாக, அமெரிக்க தூதரகத்தை ஒட்டியபடி, 4 இடங்களில் உயர் பாதுகாப்பு கோபுரம் கட்டி, அதில் பாதுகாப்புக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸாரை நிறுத்தினால், கூடுதல் பாதுகாப்பும் கிடைக்கும்.
போலீஸாரும் வெயில், மழை, வாகன புகையில் சிக்கி அவதிப்பட வேண்டியதில்லை. அமெரிக்க தூதரக பாதுகாப்புக்குத்தான் நாங்கள் நிற்கிறோம். இந்த பாதுகாப்பு கோபுரத்தை அவர்களே செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும்.
2017-ம் ஆண்டு கரன்சின்ஹா காவல் ஆணையராக இருந்தபோது, கோடைக் காலத்தில் மட்டும், காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மேம்பாலத்தில் நிற்கும் காவலர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. அதே போல இப்போதும் கோடைகாலம் முடியும் வரை பாலத்தில் நிற்கும் காவலர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த உயர் அதிகாரி தெரிவித் தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT