Published : 04 Apr 2018 08:17 AM
Last Updated : 04 Apr 2018 08:17 AM

இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணிலுக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா தீர்மானம்: தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு யாருக்கு?

இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக முன்னாள் அதிபர் ராஜபக்ச தலைமையிலான எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து விவாதமும், வாக்கெடுப்பும் இன்று (4-ம் தேதி) நடைபெறுகிறது.

இலங்கையில் அதிபர் மைத்ரிபால சிறிசேனா தலைமையிலான சுதந்திரக் கட்சியும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகின்றன. இந்நிலையில், இலங்கை உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் தனித்தனியாக போட்டியிட்டன. இதனால் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான இலங்கை பொதுஜன பெரமுனா (எஸ்எல்பிபி) அதிக இடங்களைக் கைப்பற்றியது.

இந்தத் தேர்தல் தோல்விக்கு, ஆளுங்கட்சிகளான சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றையொன்று குற்றம்சாட்டி வந்தன. மேலும், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டும் என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மட்டுமின்றி, அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திரக் கட்சி நிர்வாகிகளும் வலியுறுத்தி வந்தனர்.

மேலும் ஐக்கிய தேசிய கட்சி கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பதா, வேண்டாமா என்பது குறித்து முடிவெடுப்பதற்காக ஓர் உயர்நிலைக் குழுவையும் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா அமைத்தார்.

ரணில் பொறுப்புகள் பறிப்பு

இந்நிலையில், இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக அம்பாறை, கண்டி, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் கலவரம் வெடித்ததால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிடம் இருந்த சட்டம் ஒழுங்கு பாதுகாப்புத் துறை (போலீஸ்) அமைச்சர் பதவியை, ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த அரசியல் தலைவர் ரஞ்ஞித் மதுமா பண்டாராவுக்கு, மைத்ரிபால சிறிசேனா வழங்கினார். மேலும் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பொறுப்பில் இருந்த மத்திய வங்கி மற்றும் பங்கு வர்த்தக பரிமாற்ற ஆணைக்குழு ஆகிய இரு நிறுவனங்களையும் அதிபரின் நிதியமைச்சக பொறுப்பின் கீழ் கொண்டு வந்தார்.

கடந்த மார்ச் 21 அன்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான கடிதத்தை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச அளித்தார். இதில் மகிந்த ராஜபக்ச ஆதரவு பெற்ற கூட்டணி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 51 பேரும், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 4 உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.

இன்று (4-ம் தேதி) காலை 9.30 மணிக்கு இலங்கை நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடி நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதம் 12 மணி நேரம் நடைபெறும். பிறகு, இரவு 9.30 மணியளவில் வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

இந்நிலையில், மேலும் 7 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தால் ரணில் விக்ரமசிங்க ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முடியும். இதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்குமானால் எளிதாக ஆட்சியில் நீடிக்க முடியும். எனினும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து நேற்று இரவு வரை தெளிவுபடுத்தப்படவில்லை.

இன்று நடைபெறும் வாக்கெடுப்பின் மூலம் நேரடியாக யாருக்கு என்ன ஆதரவு என்பது தெளிவாகும். மேலும் நம்பிக்கையில்லா தீர்மானத்தில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தோல்வியுற்றால் அடுத்து யார் ஆட்சி அமைப்பார் என்பது குறித்தும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x