Published : 09 May 2024 04:52 PM
Last Updated : 09 May 2024 04:52 PM

வன விலங்குகள், தெரு நாய்களுக்கு தண்ணீர், உணவு வழங்க திட்டங்கள் என்னென்ன? - அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: கோடை வெயிலின் கொடுமையால் பாதிக்கப்படும் வன விலங்குகள், தெரு நாய்களுக்கு தண்ணீர், உணவு உள்ளிட்டவை வழங்க என்னென்ன திட்டங்கள் உள்ளன என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், விலங்குகள் நல அறக்கட்டளை நிறுவனரான சிவா என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கோடை வெயிலின் உக்கிரம் காரணமாக மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன. வன விலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் நுழைந்து விடுவதால் விலங்கு மனித மோதல்கள் ஏற்படுகிறது. அனைத்து ஜீவராசிகளையும் பாதுகாக்கும் கடமை அரசுக்கு உள்ளது. எனவே, வன விலங்குகளுக்காக குறிப்பிட்ட இடங்களில் தண்ணீர் மையங்களை ஏற்படுத்த வேண்டும்.

தெரு நாய்களுக்கு தண்ணீர், உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும், என அரசுக்கு மனு அளித்தேன். அந்த மனுவின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, தனது மனுவை பரிசீலித்து, கோடைகாலத்தில் வன விலங்குகள் மற்றும் தெரு நாய்களுக்கு தண்ணீர் மற்றும் உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் கலைமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வன விலங்குகள், தெரு நாய்களுக்கு உணவு தண்ணீர் வழங்குவதற்காக என்னென்ன திட்டங்கள் உள்ளன என்பதை தெரிவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆறு வாரங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x