Published : 08 May 2024 05:42 AM
Last Updated : 08 May 2024 05:42 AM

வழக்குகளில் விசாரணையை விரைவுபடுத்த உரிய விதிகளை வகுக்க நீதிபதிகள் பரிந்துரை

சென்னை: விவாகரத்து வழக்குகளில் விசாரணையை இழுத்தடிப்பதை தடுக்க, 9 மாதம் முதல் ஓராண்டுக்குள் எதிர்மனுக்களை தாக்கல் செய்யும் வகையில் உரிய விதிகளை வகுக்க சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் பரிந்துரைத்துள்ளனர்.

திருமணத்தின்போது பொய்யான கல்வித்தகுதியைக் கூறி மோசடி செய்ததாக கணவரிடமிருந்து விவாகரத்து கோரி மனைவி திருச்சி குடும்ப நல நீதிமன்றத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

சேர்ந்து வாழ உத்தரவிடக்கோரி கணவர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் வழக்கை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து வழங்கி கணவரின் மனுவை தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து கணவர் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.எம்.டி.டீக்காராமன், பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, திருச்சி குடும்ப நல நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தது. மேலும், விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தபிறகு, ஒன்றாக சேர்த்து வைக்கக்கோரி எதிர்தரப்பில் மனு தாக்கல் செய்ய எந்தவொரு காலவரம்பும் நிர்ணயம் செய்யப்படவில்லை என்பதால், அதை பயன்படுத்திக்கொண்டு எதிர் தரப்பினர் மனுதாக்கல் செய்து வழக்கை இழுத்தடிப்பது வாடிக்கையாகி வருகிறது. இதனால் குடும்ப நல நீதிமன்றங்களில் வழக்குகள் முடிவடைய நீண்ட காலதாமதம் ஏற்படுவதாகவும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். எனவே விவாகரத்து வழக்குகளில் 9 மாதங்களில் இருந்து ஓராண்டுக்குள் எதிர் மனுக்களை தாக்கல் செய்யும் வகையில் கால நிர்ணயம் செய்து, விதிகளில் உரிய திருத்தம் செய்ய வேண்டும் என தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x