Published : 05 May 2024 05:45 AM
Last Updated : 05 May 2024 05:45 AM

நெல்லை சம்பவம்: ஜெயக்குமார் தனசிங்கின் ‘மரண வாக்குமூலம்’ கடிதத்தால் பரபரப்பு

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், எஸ்.பி.க்கு எழுதியதாகக் கூறப்படும் கடிதம்.

திருநெல்வேலி/சென்னை: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே. ஜெயக்குமார் தனசிங், எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனக்கு சிலர் கொலை மிரட்டல் விடுப்பதாகக் கூறி, ஏப். 30-ம் தேதியிட்ட கடிதத்தை நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே.ஜெயக்குமார்தனசிங், எஸ்.பி.க்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

‘மரண வாக்குமூலம்’ எனக் குறிப்பிட்டு ஜெயக்குமார் எழுதியுள்ள கடிதத்தில், காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு உள்ளிட்டோர் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், பலரது பெயர்கள் மற்றும் அவர்களது செல்போன் எண்களை குறிப்பிட்டுள்ளார்.

தன்னிடம் லட்சக்கணக்கில் பணம்வாங்கிக் கொண்டு, அரசு ஒப்பந்தங்கள், வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றிவிட்டதாகவும், பணத்தை திருப்பிக் கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர் புகாரில் தெரிவித்திருப்பது, தமிழகஅரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங். பொருளாளர் மறுப்பு: இதற்கிடையில், தமிழ்நாடு காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன் சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியது: நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் மரணம் எனக்கு தனிப்பட்ட முறையில் பேரிழப்பாகும். 2019 இடைத்தேர்தலில் நான் அங்கு போட்டியிட்டேன். அப்போது முதல் அவர் எனக்கு உறுதுணையாக இருந்து வந்தார். 2021, 2024 தேர்தல்களிலும் கட்சிக்காக கடுமையாக உழைத்தார். அவரது இழப்பு கட்சிக்கும் பெரிய இழப்பு. இது தொடர்பாக காவல் துறை முழுமையாக விசாரணை நடத்துகிறது.

நான் அவரிடம் ரூ.70 லட்சம் பணம்வாங்கியதாகக் கூறப்படுவது உண்மைக்குப் புறம்பானது. அந்தக் கடிதத்தில் உள்ள கையெழுத்து யாருடையது என்பதை காவல் துறை விசாரிக்கும். எங்களுக்குள் கருத்து வேறுபாடு கிடையாது. அவரது பிரச்சினை தொடர்பாக என்னிடம் எதுவும் முறையிடவில்லை. நான் அவரை மிரட்டவும் இல்லை.

நான் நாங்குநேரி தொகுதியில் சிறப்பாக செயல்படுகிறேன். கட்சிக்காக உழைத்து வருகிறேன். இது பிடிக்காமல் சிலர் செயல்படுகிறார்கள் என்று தெரிகிறது. யார் என்று யூகிக்க முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் எழுதிய மரணவாக்குமூலம் கடிதம் தனக்கு அனுப்பப்படவில்லை என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் மறுத்துள்ளார்.

நடந்தது என்ன? - திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே கரைச்சுத்து புதூர் கருத்தையா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங் (60). கான்ட்ராக்ட் தொழில் செய்து வந்தார். இவருக்கு மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். பாரம்பரியமாக காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்த இவர், கடந்த 3 ஆண்டுகளாக திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து வந்தார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து சென்றவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது மகன் கருத்தையா ஜெப்ரின் (28) தனது தந்தையை காணவில்லை என்று, உவரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிந்து ஜெயக்குமாரை தேடி வந்தனர்.

இந்நிலையில், ஜெயக்குமாரின் உடல் எரிந்த நிலையில் கரைச்சுத்துபுதூர் கிராமத்திலுள்ள அவரது தோட்டத்தில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. தடய அறிவியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு தடயங்களைச் சேகரித்தனர். அங்கு திருநெல்வேலி எஸ்.பி. சிலம்பரசன் விசாரணை மேற்கொண்டார்.

“இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பிரேத பரிசோதனைக்குப் பிறகே முழு விவரங்கள் தெரிய வரும்” என எஸ்பி தெரிவித்தார். மாநகர காவல் ஆணையரும், திருநெல்வேலி சரக டிஐஜியுமான (பொறுப்பு) மூர்த்தியும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். சந்தேக மரணம் என்று உவரி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x