Published : 06 May 2024 04:10 AM
Last Updated : 06 May 2024 04:10 AM

மதுரை அரசு மருத்துவமனையில் ‘அதி வெப்ப நோய் சிகிச்சை வார்டு’ திறப்பு

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள அதிவெப்பம் சார்ந்த நோய் சிகிச்சை பிரத்யேக வார்டு. ( அடுத்த படம் ) மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகளுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டுள்ள ஓஆர்எஸ் நீர் சத்து கரைசல். படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

மதுரை: வெயிலால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க மதுரை அரசு மருத்துவமனையில் 10 படுக்கை வசதிகளுடன் கூடிய ‘அதிவெப்பம் சார்ந்த நோய் சிகிச்சைப் பிரிவு’ திறக்கப்பட்டுள்ளது. ஒஆர்எஸ் நீர்சத்து கரைசல் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கத்திரி வெயில் கடந்த 4-ம் தேதி தொடங்கியது. 17 மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருப்ப தாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் அதிக பட்சமாக கடந்த 2 நாட்களாக , 105 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியிருக்கிறது. மற்ற சில மாவட்டங்களில் 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளதால் வெயிலின் தாக்கத்தால் தமிழகம் முழுவதும் சிலர் உயிரிழந்துள்ள னர். ஆனால், அவை முழுமையாக வெளிச்சத்துக்கு வரவில்லை.

மதுரை மாவட்டத்திலே மட்டும் 3 பேர் நேற்று முன்தினம் வெயிலுக்கு உயிரிழந்ததாக தகவல்கள் பரவின. ஆனால், அந்த தகவலை அதிகாரிகள் உறுதி செய்ய மறுத்து விட்டனர். வெயிலில் இருந்து மக்களை காக்கவும், சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளுக்காக மதுரையில் முக்கிய சிக்னல்களில் நிழல் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் வெயிலில் நீர் சத்து குறைந்து பாதிக்கப் படுவோருக்கு சிகிச்சை அளிக்க பிரத்யேக வார்டுகள் அமைக்க மருத்துவக்கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, 10 படுக்கை வசதி கொண்ட வெயில் பாதிப்புக் குள்ளானோருக்கு சிகிச்சை வழங்க ‘அதிவெப்பம் சார்ந்த நோய் சிகிச்சை பிரிவு’ பிரத்யேக வார்டு அமைக்கப்பட் டுள்ளது. கோரிப்பாளையம் பழைய அரசு மருத்துவமனை பிரதான கட்டிடத்தில் பழைய 115 ‘ஏ’ வார்டு பக்கத்தில் இந்த பிரத்யேக வார்டு அமைக்கப்பட்டுள்ளது. பொது மருந்து துறை மருத்துவர்கள் தலைமையில் சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் சிகிச்சை அளிக்கப் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இது குறித்து அரசு மருத்துவமனை டீன் (பொறுப்பு) டாக்டர் தர்மராஜ் கூறியதாவது: ‘வெயிலால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க பிரத்யேக வார்டு தவிர அவசர சிகிச்சைப் பிரிவில் துரித சிகிச்சை வழங்க தனியாக 3 தனி படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பார்வையாளர்கள் தாகம் தீர்க்க ஆர் ஓ குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அவசர சிகிச்சைப் பிரிவு, பார்வையாளர்கள் அமரும் அறை, குழந்தைகள் வார்டுகள் மற்றும் வார்டுகளில் ஆங்காங்கே பார்வையாளர்கள், நோயாளிகள் குடிப்பதற்காக ஓஆர்எஸ் நீர்சத்து கரைசல் (oral rehyhration solution) வழங்கப்படுகிறது. இதுவரை வெயில் பாதித்து சிகிச்சைக்கு யாரும் வரவில்லை. வந்தால் அவர்களுக்கு உயிர் காக்கும் சிகிச்சை வழங்க அனைத்து வசதிகளையும் தயார் நிலையில் வைத்துள்ளோம், ’’ என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x