Published : 05 May 2024 05:41 AM
Last Updated : 05 May 2024 05:41 AM

காவிரி நீரை பெற நடவடிக்கை எடுக்காமல் மது விற்பதில் கவனம் செலுத்தும் திமுக அரசு: இபிஎஸ் குற்றச்சாட்டு

ஏற்காடு மலைப் பாதையில் நேரிட்ட பேருந்து விபத்தில் காயமடைந்து, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு ஆறுதல் கூறிய அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி.

சேலம்: கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு தேவையான காவிரி நீரை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்காமல், மது விற்பதிலேயே திமுக அரசு கவனமாக இருக்கிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.

சேலம் மாவட்டம் ஏற்காடுமலைப் பாதையில் நேரிட்டபேருந்து விபத்தில் காயமடைந்தவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று சந்தித்து, நலம் விசாரித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சியால் மக்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகின்றனர். பலஇடங்களிலும் குடிநீர் கோரி போராட்டங்கள் நடைபெறுகின்றன. ஆனால், இதையெல்லாம் கவனிக்காத முதல்வர் ஸ்டாலின், ஓய்வெடுக்க கொடைக்கானல் சென்றுள்ளார். அவருக்கு மக்களைப் பற்றி கவலையில்லை.

மேட்டூர் அணை வறண்டு வரும் நிலையில், கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு உரிய காவிரி நீரைப் பெற்றுத் தர அரசுஎந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை கர்நாடக அரசுமதிக்கவில்லை. இந்த விவகாரத்தில் முதல்வர் மவுனம் சாதிப்பதுகண்டனத்துக்குரியது. தமிழகத்தில் கோதுமை பீர் அறிமுகப்படுத்தியுள்ள திமுக அரசு, மதுவை விற்பதிலேயே கவனமாக உள்ளது.

அதிமுக ஆட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் புதிதாக வாங்கப்பட்டன. திமுக அரசுஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் புதிய பேருந்துகள் வாங்குவதாக அறிவித்தது. ஆனால், இதுவரை வாங்கவில்லை. பேருந்துகளின் மோசமான நிலை குறித்து மக்களும், ஓட்டுநர்களும் புகார் தெரிவிக்கின்றனர்.

அதிமுக அரசு கொண்டுவந்த திட்டங்களை திமுக அரசு முடக்கிஉள்ளது. சேலம் மாவட்டத்தில் 100 ஏரிகளில் காவிரி உபரி நீரை நிரப்பும் திட்டம், ரூ.1,000 கோடியில் தலைவாசலில் அமைக்கப்பட்ட கால்நடைப் பூங்கா திட்டம் ஆகியவை முடங்கியுள்ளன.

இவ்வாறு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x