Published : 24 Apr 2018 09:17 AM
Last Updated : 24 Apr 2018 09:17 AM
கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், கடந்த வாரம் ஒரே நாளில் மின்நுகர்வு மிக அதிகபட்சமாக 352.218 மில்லியன் யூனிட்டை எட்டியுள்ளது. கத்திரி வெயில் தொடங்கியதும் மின்நுகர்வு மேலும் அதிகரிக்கும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2016 ஏப்ரல் 29-ம் தேதி மிக அதிகபட்சமாக மின்நுகர்வு 345.617 மில்லியன் யூனிட்டாக இருந்தது. இந்நிலையில், கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை மிக அதிகபட்சமாக மின்நுகர்வு 350.367 மில்லியன் யூனிட்டாக இருந்தது. 2 நாட்கள் கழித்து வியாழக்கிழமை மின்நுகர்வு மிக அதிகபட்சமாக 352.218 மில்லியன் யூனிட்டை எட்டியுள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மின் வாரியத்தின் மாநில மின்சுமை அனுப்பும் மையத்தில் நாள்தோறும் காலை, மதியம், மாலை ஆகிய 3 நேரமும் மின்நுகர்வு குறித்து கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தக் கணக்கெடுப்பில், கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவாக கடந்த வியாழனன்று மின்நுகர்வு மிக அதிகபட்சமாக 352.218 மில்லியன் யூனிட்டை எட்டியுள்ளது. இதன்மூலம், 15,300 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அடுத்த மாதத்தில் மின்வெட்டு ஏற்படுமோ என அச்சப்படத் தேவையில்லை. 15,500 மெகாவாட் அளவு மின்சார தேவையை சமாளிக்கும் அளவுக்கு தற்போது மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT