Published : 30 Apr 2024 05:08 AM
Last Updated : 30 Apr 2024 05:08 AM

ஆன்லைன் ரம்மியால் அடுத்தடுத்து உயிரிழப்புகள்; உச்ச நீதிமன்றத்தில் உடனே தடை பெற வேண்டும்: அன்புமணி

சென்னை: ஆன்லைன் ரம்மியால் அடுத்தடுத்து உயிரிழப்புகள் ஏற்படுவதால், கோடை விடுமுறைக்கு முன்பாக உச்ச நீதிமன்றத்தில் தடை பெற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூரியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பெரியார் நகரைச் சேர்ந்த உணவக உரிமையாளர் ராமு, ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளார். அதற்காக பல்வேறு தரப்பினரிடமிருந்தும் வாங்கிய ரூ.10 லட்சம் கடனை அடைக்க முடியாமல், கிணற்றில்குதித்து தற்கொலை செய்துகொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தற்கொலை செய்து கொண்ட இளைஞர் ராமுவுக்கு 38 வயதுதான். வாழ்வில் சிரமப்பட்டு, பின்னர் கஷ்டப்பட்டு முன்னேறி வந்த நிலையில், ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகியுள்ளார். ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம், ரம்மி, போக்கர் போன்ற திறமை சார்ந்த விளையாட்டுகளுக்குப் பொருந்தாது என்று கடந்த ஆண்டு நவம்பர் 10-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, ஆன்லைன் சூதாட்டத்தால் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆன்லைன் ரம்மிக்கு அப்பாவிஉயிர்கள் தொடர்ந்து பறிபோவதைத் தடுக்க, தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

எனவே, சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தடை பெறுவதுதான், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாகும். சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகி 6 மாதங்களாகியும், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

உச்ச நீதிமன்றத்துக்கு மே 20-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படவிருக்கிறது. அதற்குள் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்காலத் தடை பெறாவிட்டால், ஜூலை மாதம் வரை ஆன்லைன் ரம்மிக்கு தடை வாங்கமுடியாது. எனவே, கோடை விடுமுறைக்கு முன்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கை விசாரணைக்கு கொண்டுவரவும், உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை பெறவும் தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x