Published : 27 Apr 2024 06:04 AM
Last Updated : 27 Apr 2024 06:04 AM

அரசு பேருந்துகளை முறையாக பராமரிக்க தலைமைச் செயலர் உத்தரவு: காலாவதியான பேருந்துகளை கணக்கெடுக்கவும் பரிந்துரை

சென்னை: பேருந்து இருக்கையுடன் நடத்துநர் வெளியே விழுந்த சம்பவத்தை தொடர்ந்து, போக்குவரத்து துறை செயலர் மற்றும் அதிகாரிகளுடன் தலைமைச் செயலர் ஆலோசனை நடத்தினார். தமிழகம் முழுவதும் அனைத்து பேருந்துகளையும் முழுமையாக ஆய்வு செய்யவும், முறையாக பராமரிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கே.கே.நகருக்கு அரசு நகரப் பேருந்து புறப்பட்டு சென்றது. ஒரு வளைவில் திரும்பியபோது, நடத்துநர் முருகேசன் (54), பேருந்தில் இருந்து இருக்கையுடன் சேர்ந்து வெளியே விழுந்து காயமடைந்தார். இதைத் தொடர்ந்து, அரசுப் பேருந்துகள் பராமரிப்பு மோசமாக இருப்பதாக பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையே, இந்த விவகாரத்தில் பணிமனை மேலாளர் உள்ளிட்ட 3 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், தமிழகத்தில் பேருந்து பராமரிப்பு தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை செயலர் க.பணீந்திர ரெட்டி மற்றும் அதிகாரிகளுடன் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா நேற்று ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் உள்ளிட்ட8 கோட்டங்களின்கீழ் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் பராமரிக்கப்படுகின்றன. இதில், சொகுசு பேருந்து, தாழ்தள சொகுசு பேருந்து, குளிர்சாதன பேருந்து, படுக்கை வசதி உள்ள பேருந்து உட்பட 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கத்தில் உள்ளன.

மேலும், மின்சார பேருந்து உட்பட பல்வேறு பேருந்துகள் வாங்குவதற்கான நடவடிக்கைகளை தமிழக போக்குவரத்து துறை எடுத்து வருகிறது. இந்த சூழலில், பராமரிப்பு குறைபாடு காரணமாக, பேருந்தின்முன்பக்க படிக்கட்டு வழியாக இருக்கையுடன் சேர்ந்து நடத்துநர் வெளியே வந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, செயல்பாட்டில் உள்ளஅனைத்து பேருந்துகளையும் முழுமையாக ஆய்வு செய்ய,தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக புதிய பேருந்துகள், காலாவதியான பேருந்துகளின் எண்ணிக்கை, பராமரிப்பு பணியில் உள்ள பேருந்துகளின் நிலைதொடர்பாக ஆய்வு நடத்தவும், பேருந்துகளை முறையாக பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளதாகவும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x