Published : 27 Apr 2024 06:16 AM
Last Updated : 27 Apr 2024 06:16 AM

செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தை மத்திய அரசு எவ்வாறு அமல்படுத்தும்?: விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: எந்த அறிவியல் பூர்வமான ஆய்வும் மேற்கொள்ளாமல், செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் எப்படி நடைபெறும் என்பது குறித்து மத்திய அரசு விளக்கம அளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் பொதுமக்களுக்கான செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டம் தமிழகத்தில் முன்னோடித் திட்டமாக திருச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில் ரேஷன் கடைகளிலும், பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவுத் திட்டத்தின் கீழும் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்நிலையில், இந்த திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரிகடலூர் மாவட்டம் முருகன்குடியைச் சேர்ந்த கனிமொழி மணிமாறன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அதில், செறிவூட்டப்பட்ட அரிசிஉடல்நலனுக்குப் பாதிப்பைஏற்படுத்தும். தலசீமியா, அனீமியாவால் பாதிக்கப்பட்டவர்கள் இரும்புச் சத்து அதிகம் கொண்ட செறிவூட்டப்பட்ட அரிசியை உண்டால், நோய் பாதிப்பு இன்னும் அதிகமாகும் எனத் தெரிவித்திருந்தார்.

இதேபோல, தலசீமியா, அனீமியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவர்களின் ஆலோசனைப்படியே இந்த அரிசியை உண்ண வேண்டும் என்று அரிசிப் பைகளில் எச்சரிக்கை வாசகம் இடம் பெறவில்லை என்றுகூறி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் வழக்கறிஞர் வெற்றிச்செல்வனும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, இது தொடர்பாக ரேஷன் கடைகளின் முன் எச்சரிக்கை வாசகங்களுடன் கூடிய அறிவிப்புப் பலகை வைக்கப்படுவதால், அரிசிப் பைகளில் எச்சரிக்கை வாசகம் இடம்பெறவில்லை என்றார்.

அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜ், எந்த அறிவியல் பூர்வமான ஆய்வும் மேற்கொள்ளாமல், செறிவூட்டப்பட்ட அரிசித் திட்டத்தை அமல்படுத்தியுள்ளதாகவும், நாடாளுமன்றத்திலும் இது தொடர்பாக முறையிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதையடுத்து நீதிபதிகள்,இந்த திட்டம் பாராட்டுக்குரியது என்றாலும், எந்த அறிவியல் பூர்வமான ஆய்வும் மேற்கொள்ளாமல், செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் எப்படி அமல்படுத்தப்படும், இந்த அரிசியை யார், யார் உண்ணக்கூடாது என்பதை எப்படி கண்காணிக்கப் போகிறீர்கள் என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 19-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x