Published : 26 Apr 2024 07:44 PM
Last Updated : 26 Apr 2024 07:44 PM

ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவு

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து கட்டு கட்டாக கைப்பற்றப்பட்ட பணம். | கோப்புப்படம்

சென்னை: தேர்தல் பறக்கும் படையினரால் தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி காவல் துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியர்கள் உள்ளிட்ட மூவரிடம் ரூ.3.99 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து, நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். விசாரணையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள உணவு விடுதியில் இருந்து அதிகபணம் கைமாறியது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த உணவு விடுதி இருக்கும் கட்டிடம் பாஜக தொழில் துறைப் பிரிவு தலைவரான கோவர்த்தனனுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. அங்கும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டு, ரூ.1.10 லட்சம் ரொக்கத்தைக் கைப்பற்றினர்.

இது தொடர்பாக விசாரிக்க நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீஸார் சம்மன் அனுப்பிய நிலையில், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. மாறாக, “தேர்தல் பணி, சொந்த பணி காரணமாகவும் 10 நாட்கள் அவகாசம் வேண்டும். 10 நாட்களுக்கு பிறகு விசாரணைக்கு ஆஜராகிறேன்” என்று விசாரணைக்கு ஆஜராக 10 நாட்கள் அவகாசம் கேட்டு வழக்கறிஞர் மூலம் கடிதம் அனுப்பினார் நயினார் நாகேந்திரன்.

இதையடுத்து ஏப்.25-ம் தேதியன்று நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீஸார் இரண்டாவது சம்மன் அனுப்பியுள்ளனர். முதல் சம்மனுக்கு ஆஜராகாத நிலையில் இரண்டாவது சம்மனை நயினார் நாகேந்திரனிடமே போலீஸார் ஒப்படைத்துள்ளதாக தகவல் வெளியானது.

மேலும், தாம்பரம் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட பணம் எங்கு கொண்டு செல்லப்படவிருந்தது? அது யாருடைய பணம் என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x