Published : 26 Apr 2024 07:12 PM
Last Updated : 26 Apr 2024 07:12 PM

கோலி, ரோகித் சர்மாவின் டி20 எதிர்காலம் எப்படி? - இது யுவராஜ் சிங் பார்வை

துபாய்: வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற வேண்டிய வீரர்கள், சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் டி20 கிரிக்கெட் எதிர்காலம் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

2007-ல் டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் முக்கிய பங்காற்றிய நட்சத்திர ஆட்டக்காரர் யுவராஜ் சிங். இந்நிலையில், இந்திய அணி இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வெல்ல செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து அவர் தெரிவித்துள்ளார். இந்த தொடரின் அம்பாசிட்டராகவும் அவர் அறிவிக்கப்பட்டுள்ளார். “இந்திய அணியின் மிக முக்கிய வீரர்களில் ஒருவராக சூர்யகுமார் யாதவ் நிச்சயம் இருப்பார். 15 பந்துகளில் ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறன் படைத்த வீரர் அவர். இந்திய அணி உலகக் கோப்பை வெல்ல அவரது ஆட்டம் நிச்சயம் உதவும்.

பந்துவீச்சில் பும்ரா மற்றும் சஹல் சிறப்பாக செயல்படுவார்கள் என எதிர்ப்பார்க்கிறேன். அதேபோல அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக்குக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படும் என்றால் அணியில் எடுக்கலாம். அப்படி இல்லாத பட்சத்தில் அந்த இடத்தில் இளம் வீரருக்கு வாய்ப்பு வழங்கலாம். ரிஷப் பந்த் மற்றும் சஞ்சு சாம்சன் நல்ல ஃபார்மில் உள்ளனர்.

இந்திய அணியில் இந்த தொடரில் ஷிவம் துபேவை நான் பார்க்க விரும்புகிறேன். அவருக்கு அணியில் தொடர் வாய்ப்புகள் இல்லை. இந்த ஐபிஎல் சீசனில் அவர் சிறப்பாக பேட் செய்து வருகிறார். அவர் ஒரு கேம் சேஞ்சர். அவர் அணியில் இடம்பெற வேண்டும்.

என்னதான் தரமான ஃபார்மில் இருந்தாலும் அதை மறந்து, வயதின் அடிப்படையில் மூத்த வீரர்கள் மீது விமர்சனங்கள் எழும். விராட் மற்றும் ரோகித் என இருவரும் சிறந்த வீரர்கள். தங்களது விருப்பத்துக்கு ஏற்ப சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு குறித்த முடிவை அவர்கள் அறிவிக்கலாம்.

இந்த தொடருக்கு பிறகு டி20 பார்மெட்டுக்கான இந்திய அணியில் இளம் வீரர்களை அதிகம் பார்க்க விரும்புகிறேன். அது அடுத்த டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியை கட்டமைக்க உதவும். அனுபவ வீரர்கள் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடலாம்” என யுவராஜ் தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் விராட் மற்றும் ரோகித் என இருவரும் சிறந்த முறையில் ஆடி ரன் சேர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x