Published : 25 Apr 2024 04:08 AM
Last Updated : 25 Apr 2024 04:08 AM

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான எக்ஸ்ரே பிலிம்களின் எண்ணிக்கை திடீர் குறைப்பு

பிரதிநிதித்துவப் படம்

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு போதிய எண்ணிக்கையில் எக்ஸ்ரே பிலிம் மற்றும் ரசாயனம் வழங்கப்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டீஸ்வரம், கோணுளாம்பள்ளம், மெலட்டூர், கபிஸ்தலம், தாமரங்கோட்டை, தொண்டராம்பட்டு, முருக்கங்குடி, சில்லத்தூர், திருவோணம், அழகியநாயகிபுரம், வல்லம், பாளையப்பட்டி, மதுக்கூர், செருவாவிடுதி, நடுக்காவேரி ஆகிய 15 இடங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன.

இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளில், மருத்துவரின் பரிந்துரையின் பேரில் தேவைப்படுவோருக்கு மட்டும் ரூ.20 கட்டணத்தில் எக்ஸ்ரே எடுக்கப்படுகிறது. இந்நிலையில், எக்ஸ்ரே பிரிவுக்கு போதிய எண்ணிக்கையில் எக்ஸ்ரே பிலிம் மற்றும் அதைக் கழுவுவதற்கான ரசாயனம் வழங்கப்படுவதில்லை என்றும், இதன் காரணமாக நோயாளிகள் எக்ஸ்ரே எடுக்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக எக்ஸ்ரே பிரிவு ஊழியர்கள் கூறியது: எக்ஸ்ரே பிரிவுக்கு மாதந்தோறும் 50 எக்ஸ்ரே பிலிம்கள் மற்றும் அதற்குத் தேவையான ரசாயனம் வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 6 மாதங்களாக 3 மாதங்களுக்கு 100 எக்ஸ்ரே பிலிம்கள் வீதம் கணக்கிட்டு வழங்கப்படுகிறது. இதனால் தேவைப்படும் அனைவருக்கும் எக்ஸ்ரே எடுக்க முடியவில்லை. இதனால், எங்களுடன் பொதுமக்கள் தகராறில் ஈடுபடுகின்றனர்.

சில ஆரம்ப சுகாதார நிலைய எக்ஸ்ரே பிரிவு ஊழியர்கள், அவரச தேவைகளுக்கு சுற்றுப்பகுதியில் உள்ள பிற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு முறையாக கடிதம் வழங்கி எக்ஸ்ரே பிலிம்களை பெற்று மக்களுக்கு பயன்படுத்துகின்றனர். இல்லையெனில், அரசு மருத்துவ மனைக்குச் சென்று எக்ஸ்ரே எடுத்துக் கொள்ளுமாறு அனுப்பிவிடுகின்றனர்.

இது குறித்து உயர் அதிகாரிகளிடம் கூறினால், நிதி பற்றாக்குறையாக இருப்பதால், இருப்பதை வைத்து சமாளியுங்கள் என்று பதில் கூறுகின்றனர். மேலும், மெலட்டூர், தாமரங்கோட்டை, சில்லத்தூர் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள எக்ஸ்ரே கருவிகள் மிகப் பழையதாகிவிட்டதால், அடிக்கடி செயல்படுவதில்லை. இவற்றை மாற்றி நவீன எக்ஸ்ரே கருவி பொருத்த வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு போதிய எண்ணிக்கையில் எக்ஸ்ரே பிலிம்கள் மற்றும் ரசாயனம் வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இது தொடர்பாக மாவட்ட சுகாதார அலுவலர் ( பொது சுகாதாரம் ) கலைவாணி கூறுகையில், ‘‘தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும், தேவையான எண்ணிக்கையில் எக்ஸ்ரே பிலிம்கள் மற்றும் ரசாயனம் வழங்கப்பட்டு வருகிறது’’ என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x