Published : 25 Apr 2024 11:24 AM
Last Updated : 25 Apr 2024 11:24 AM

தமிழகத்தில் 3 பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கவில்லை: ஓபிஎஸ் சாடல்

ஓபிஎஸ்

சென்னை: தமிழகத்தில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்காமல் மாணவ, மாணவியரின் கல்வியோடு திமுக அரசு விளையாடுகிறது என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “செல்வங்களுள் மிகச் சிறந்தது கல்விச் செல்வம் என்பார்கள். 'மனிதனாகப் பிறத்தல் அரிது, அவ்வாறு பிறந்தாலும் கல்வியில் சிறந்து விளங்குதல் அதைவிட அரியது" என்பதற்கேற்ப ஒவ்வொருவரும் கல்வி அறிவை பெறுவது அவசியம். கல்வி ஒன்றுதான் மக்களை நல்லவராகவும், வல்லவராகவும், புகழ் மிக்கவராகவும் வாழ வைக்கிறது. இப்படிப்பட்ட கல்வியை அளிக்கும் பல்கலைக்கழகங்கள் மாலுமி இல்லாத கப்பல் போல தமிழ்நாட்டில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

சென்னைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் போன்றவை துணை வேந்தர்கள் இல்லாத பல்கலைக்கழகங்களாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதற்குக் காரணம், ஆட்சியில் இருக்கும்போது ஒரு கொள்கை, ஆட்சியில் இல்லாதபோது போது ஒரு கொள்கை என இரட்டை நிலைப்பாட்டினை திமுக எடுத்திருப்பதுதான்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் முரண்பாடுகளில் மொத்த உருவமாக தி.மு.க. விளங்குகிறது. திமுக அரசின் இந்தச் செயல்பாடு காரணமாக கல்வி பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகம் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, கல்வியில் சிறந்து விளங்கும் உயரிய பல்கலைக்கழகங்கள் குறித்து மிகுந்த கவலைப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கல்வி என்பது பொதுப் பட்டியலில் உள்ளது. எனவே, பல்கலைக்கழக மானியக் குழு விதிக்கும் நிபந்தனைகளை பின்பற்றுவது அவசியம். இதனைப் பின்பற்றாமல், துணை வேந்தரை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை திமுக அரசு எடுத்துள்ளதுதன் காரணமாக தலைமையில்லாமல் பல்கலைக்கழகங்கள் தற்போது இயங்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

ஒரு வேளை 'இண்டி' கூட்டணிக்கே தலைமையில்லை என்ற நிலையில் பல்கலைக்கழகங்களுக்கு எதற்கு தலைமை என்று தி.மு.க. அரசு நினைத்துவிட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எது எப்படியோ, திமுக அரசின் மோதல் போக்கு, மாணவ, மாணவியரின் கல்வியை கடுமையாக பாதித்துள்ளது.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி மூலம் நடத்தப்படும் பட்டப் படிப்புகளுக்கான தேர்வுகள் இன்னமும் நடத்தப்படவில்லை என்றும், பலருக்கு அதற்கான பாடப் புத்தகங்கள்கூட விநியோகிக்கப்படவில்லை என்றும் மாணவ, மாணவியர் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆண்டு ஜூன் மாதமாவது தேர்வுகளை பல்கலைக்கழகம் நடத்துமா என்ற சந்தேகம் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுபோல பல வேதனைகளை மாணவ, மாணவியர் அனுபவித்து வருகின்றனர்.

பதினேழு ஆண்டுகள் மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த திமுக., தன் தயவினால் இயங்கி வந்த மத்திய அரசிடம் வாதாடி, போராடி கல்வியை பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர ஒரு நடவடிக்கை எடுக்காமல், தற்போது மத்திய அரசின் நிறுவனமான பல்கலைக்கழக மானியக் குழுவுடன் முரண்படுவது ஏற்புடையதல்ல.

இது தும்பை விட்டு வாலைப் பிடிப்பதற்கு சமம். மேலும், பல்கலைக்கழகங்களில் அரசியல் தலையீடு என்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. திமுகவின் பொதுச் செயலாளராக பல ஆண்டு காலம் இருந்து மறைந்த பேராசிரியர், முன்னாள் கல்வி அமைச்சர் க. அன்பழகன் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 1996 ஆம் ஆண்டு இது குறித்து பேசி இருக்கிறார். இதனைக் கருத்தில் கொள்ளாமல், மோதல் போக்கை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக விதண்டாவாதம் செய்வது, மாணவ, மாணவியரின் எதிர்காலத்தோடு விளையாடுவது கடும் கண்டனத்திற்குரியது.

தமிழ்நாட்டு மாணவ, மாணவியரின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு, தற்போதுள்ள நடைமுறைகளின்படி பல்கலைகழகங்களின் துணை வேந்தர் நியமனத்தை மேற்கொள்ள உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x