Published : 15 Apr 2024 04:32 PM
Last Updated : 15 Apr 2024 04:32 PM

“எப்படி சலுகை காட்ட முடியும்?” - தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் வழக்கில் ஐகோர்ட் கேள்வி

ராஜேஷ் தாஸ் | கோப்புப்படம்

சென்னை: பெண் எஸ்.பி-க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த வழக்கில் காவல் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு பெண் எஸ்.பி. ஒருவருக்கு அப்போதைய சிறப்பு டிஜிபியான ராஜேஷ் தாஸ் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் அளித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் ராஜேஷ் தாஸ் உட்பட இரு அதிகாரிகள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தது.

விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 12-ம் தேதி உறுதி செய்தது. இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும். சரண் அடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனக் கூறி, ராஜேஷ் தாஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபானி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜேஷ் தாஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், “பல ஆண்டுகளாக காவல் துறைக்கு தலைமை வகித்த நிலையில், சிறைக்கு சென்றால் அது தனக்கு மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தும். சிறையில் அடைக்கப்பட்ட பிறகு மேல் முறையீட்டில் ஒருவேளை தான் விடுதலை செய்யப்பட்டால் என்னவாகும்?” என்று வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “முதலில் சரணடைந்து விட்டு பின்னர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தால் அது குறித்து பரிசீலிக்கலாமே?” என்று தெரிவித்தார். மேலும், “சாதாரண மனிதர்கள், குண்டுமணியை திருடினால் உடனே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். அவர்களுக்கு 90 நாட்கள் கழித்து தான் ஜாமீன் கிடைக்கிறது. பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் இரு நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்ட நபருக்கு எப்படி சலுகை காட்ட முடியும்?” என கேள்வி எழுப்பிய நீதிபதி, “தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரும் இந்த வழக்கில் காவல் துறையின் நிலைப்பாடு என்ன? இந்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டதா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், “ராஜேஷ் தாஸுக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக் கூடாது. அவருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் உள்ளன. மேலும், இந்த மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வேண்டும்” என கேட்டுக்கொண்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை புதன்கிழமைக்கு (ஏப்.17 ) தள்ளிவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x