Published : 15 Apr 2024 03:36 PM
Last Updated : 15 Apr 2024 03:36 PM

“சிறையில் கேஜ்ரிவாலை பயங்கரவாதியை போல நடத்துகிறார்கள்” - பகவந்த் மான் ஆதங்கம்

பகவந்த் மான்

புதுடெல்லி: “சிறையில் கொடுமையான குற்றவாளிகளுக்கு கிடைக்கும் வசதிகள்கூட டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு கொடுக்காதது வேதனையளிக்கிறது. அவர் என்ன தவறு செய்தார்? நாட்டின் மிகப் பெரிய பயங்கரவாதியை பிடித்தது வைத்திருப்பது போல் அவரை நடத்துகிறார்கள்” என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான பகவந்த் மான் திஹார் சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை திங்கள்கிழமை சந்தித்தார். இரு தலைவர்களும் இன்டர்காம் மூலம் பேசியதாக கூறப்படுகிறது. இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பகவந்த் மான் பேசும்போது, “சிறையில் கொடுமையான குற்றவாளிகளுக்கு கிடைக்கும் வசதிகள் கூட கேஜ்ரிவாலுக்கு கொடுக்காதது வேதனையளிக்கிறது. அவரைப் பார்த்து நான் உணர்ச்சிவசப்பட்டேன்.

கேஜ்ரிவால் என்ன தவறு செய்தார்? பள்ளிகளை உருவாக்குகிறார். மக்களுக்கு இலவச மின்சாரம் கொடுத்துள்ளார். மக்களுக்கு சிகிச்சை அளிக்க மொஹல்லா கிளினிக்குகளை உருவாக்கி வருகிறார். நாட்டின் மிகப் பெரிய பயங்கரவாதியை பிடித்து வைத்திருப்பது போல் அவரை நடத்துகிறார்கள்.

பிரதமருக்கு என்ன வேண்டும்? அரவிந்த் கேஜ்ரிவால் ஒரு நேர்மையான நபர், அவர் வெளிப்படையான அரசியலைத் தொடங்கி பாஜகவின் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதனால்தான் அவர் இவ்வாறு நடத்தப்படுகிறார். நான் எப்படி இருக்கிறீர்கள் என்று கேஜ்ரிவாலிடம் கேட்டதற்கு அவர் தன்னைப் பற்றி பேசவில்லை, அவர் என்னிடம் பஞ்சாப் பற்றி கேட்டார்.

நாங்கள் கேஜ்ரிவாலுடன் நிற்கிறோம். ஜூன் 4-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்போது, ஆம் ஆத்மி கட்சி நாட்டில் பெரிய அரசியல் சக்தியாக உருவெடுக்கும்” என்றார். இதனிடையே, அரவிந்த் கேஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் 23-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x