Published : 11 Apr 2024 04:12 AM
Last Updated : 11 Apr 2024 04:12 AM

மக்களவைத் தேர்தலில் பழனிசாமிக்கு வேலையே கிடையாது: ப.சிதம்பரம் பிரச்சாரம்

இளையான்குடி: மக்களவைத் தேர்தலில் பழனிசாமிக்கு வேலையே கிடையாது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே தாயமங்கலம், முனைவென்றி, கொன்னக்குளம், கொல்லங்குடி, புலியடிதம்பம் உள்ளிட்ட பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து ப.சிதம்பரம் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது: மத்தியில் காங்கிரஸ், பாஜக ஆகிய 2 கட்சிகள்தான் ஆட்சி அமைக்க கூடிய கட்சிகள். இதனால் மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு எந்த பங்களிப்பும் இல்லை. எந்த பங்கையும் அவர்களால் அளிக்க முடியாது. பாஜகவுடன் கூட்டணி முறிந்துவிட்டதாக பழனிசாமி அறிவித்தார். ஆனால் அவர்களுக்குள் ரகசிய தொடர்பு இருப்பதாக கூறுகின்றனர். இந்த தேர்தலில் பழனிசாமிக்கு வேலையே கிடையாது.

எந்த தொகுதியிலும் வெல்ல முடியாது. தமிழகத்தில் ஒரு தொகுதியில் வென்றால், மக்களவையில் கடைசி வரிசையில் ஓரிடம் தருவார்கள். பேசுவதற்கு 2 நிமிடங்கள் கிடைக்கும். பாஜக இதுவரை சுண்டு விரலை கூட தமிழகத்தில் பதிக்க முடியவில்லை. எப்படியாவது சுண்டு விரலை பதிக்க முயற்சித்து வருகிறது. இதற்காக பாமக மற்றும் உதிரி கட்சிகளை சேர்த்து கூட்டணி வைத்துள்ளது. தமிழகத்துக்கு எந்த திட்டத்தையும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை.

காளையார்கோவிலில் மத்திய அரசின் காளீஸ்வரா நூற்பாலையை விரிவாக்கம் செய்ய ரூ.63 கோடி ஒதுக்கினோம். பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் நூற்பாலையை மூடிவிட்டனர். முந்தைய காங்கிரஸ் அரசு பயிர் காப்பீட்டு திட்டம், கல்விக் கடன் திட்டத்தை கொண்டு வந்தது. ரூ.60,000 கோடி விவசாயக்கடனை ரத்து செய்தது. இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x