Last Updated : 09 Apr, 2024 08:08 PM

 

Published : 09 Apr 2024 08:08 PM
Last Updated : 09 Apr 2024 08:08 PM

“எய்ம்ஸ் பற்றி கேட்டால் பழனிசாமிக்கு கோபம் வருகிறது. ஏனெனில்...” - உதயநிதி @ மேட்டூர்

உதயநிதி ஸ்டாலின்

மேட்டூர்: “தமிழக அரசு வரலாற்றில் மறக்க முடியாத, மறைக்க முடியாத ஒரு புகைப்படமாக மாறிவிட்டது. பாதம் தாங்கிய பழனிசாமி என்ற பெயர்தான் அவருக்கு சரியானது” என எடப்பாடி பழனிசாமியை, உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

சேலம் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதிக்கு ஆதரவாக, திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று எடப்பாடியில் பிரச்சாரம் செய்தார். அப்போது, அவர் பேசியது: “கடந்த தேர்தலின் போது எதிர் அணியினர் ஒன்றாக வந்தார்கள். தற்போது, பிரிந்து தேர்தலை சந்திப்பதால், நாம் அதிக வாக்கு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.

உலக வரலாற்றிலேயே காலில் விழுந்து முதல்வரானவர்தான் பழனிசாமி. தமிழக அரசு வரலாற்றில் மறக்க முடியாத, மறைக்க முடியாத ஒரு புகைப்படமாக மாறிவிட்டது. பாதம் தாங்கிய பழனிசாமி என்ற பெயர்தான் அவருக்கு சரியானது. பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா. அவரை ஜெயிலுக்கு அனுப்பி விட்டு, யார் இந்த சசிகலா என கேள்வி கேட்டவர் தான், இந்த துரோகி பழனிசாமி.

கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம், மோடி மற்றும் பழனிசாமி ஆகியோர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்கள். மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய ஒற்றை கல்லை எடுத்து கொண்டு வந்து விட்டேன். பாஜக ஆளுகின்ற ஆறு மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. நான் மருத்துவமனையில் இருந்து எடுத்து வந்த கல்லை காட்டுகிறேன். ஆனால், பழனிசாமி எங்கிருந்து எடுத்துக்கொண்டு வந்த பல்லை காட்டுகிறார். சிரிக்கிறது தப்பில்லை. நான் உருவ கேலி செய்யவில்லை.

ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை என சொன்னவர் அண்ணா. ஒன்றிய அரசு சார்பில் வந்திருப்பவர் ஆர்.என் ரவி அல்ல, ஆர்எஸ்எஸ் ரவி. தபால்கார வேலை தான் ஆளுநர் செய்ய வேண்டும், இதுதான் அவரது வேலை. தமிழ்நாட்டுக்கு தேவையில்லாத வேலையை அனைத்தும் செய்கிறார்.

ஆளுநர் எப்போது சட்டமன்றத்துக்கு வருகிறார் என்பதும் தெரியாது, வெளியே செல்வதும் தெரியாது. எடப்பாடி மக்கள் வீரமிக்க, சுயமரியாதை மிக்க மக்கள். இந்த ஊரில் இருந்து வந்துவிட்டு வீரமும், சுயமரியாதையும் இல்லாமல் இருக்கிறார் பழனிசாமி. தமிழ்நாட்டிற்கு நல்ல விஷயங்களை செய்யாமல் அனைத்து உரிமைகளையும் ஒன்றிய அரசிற்கு அடகு வைத்தது தான் ஒரே வேலை.

பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்றார் பழனிசாமி. ஆனால், எய்ம்ஸ் மருத்துவமனையைப் பற்றி கேள்வி கேட்டால் பழனிசாமிக்கு கோபம் வருகிறது. ஏனென்றால், பாஜகவும் அதிமுகவும் கள்ளக் கூட்டணி வைத்துள்ளது. மக்களுக்கு எதிராக விரோதமாக, ஒன்றிய அரசு கொண்டு வந்த சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தது அதிமுக.

சமூக நீதி என்பது அனைவரும் சமம் என ராமதாஸ் கூறி கட்சி ஆரம்பித்தார். மனுநீதி பேசுகின்ற ஒன்றிய அரசுடன் கூட்டணி வைத்துள்ளார். தமிழக மக்கள் நன்றாக சாமி கும்பிடுவார்கள், தேர்தல் வந்துவிட்டால் உதயசூரியனுக்கு தான் ஓட்டு போடுவார்கள்.

கரோனா பெருந்தொற்று காலத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்டு, கவச உடை அணிந்து நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறதா என ஆய்வு செய்தவர் நம் முதல்வர். தமிழகத்தில் 6 மாதங்களில் தகுதி வாய்ந்த அனைத்து மகளிருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும். தமிழகத்தில் 1.16 கோடி பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கிய நம் முதல்வர், மற்ற மகளிருக்கு வழங்க மாட்டாரா அனைவருக்கும் வழங்குவார்” இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x