Published : 30 Mar 2024 09:19 PM
Last Updated : 30 Mar 2024 09:19 PM

“மத்திய உளவுத் துறை ‘ரிப்போர்ட்’ அறிந்து பதற்றத்தில் மோடி” - மு.க.ஸ்டாலின் பேச்சு @ சேலம்

சேலம்: “பிரதமர் மோடிக்கு சொல்லப்படாத ஒரு தகவலைச் சொல்கிறேன். போதைப் பொருள் தொடர்புடைய வழக்குகளில் பாஜகவைச் சேர்ந்த 14 பேர் இங்கு சிறைகளில் இருக்கிறார்கள். அதற்கும் ஆதாரம் இருக்கிறது. இதற்குப் பிரதமர் மோடி என்ன விளக்கம் அளிப்பார்?” என்று சேலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “பிரதமர் மோடிக்கு மத்திய உளவுத் துறை கொடுத்திருக்கும் ‘ரிப்போர்ட்’ காரணமாக பிரதமர் மோடி தூக்கத்தைத் தொலைத்துவிட்டுப் பதற்றப்படுகிறார்” என்றும் அவர் கூறினார்.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெற்ற இண்டியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் சேலம் வேட்பாளர் செல்வகணபதி, கள்ளக்குறிச்சி வேட்பாளர் மலையரசன் ஆகியோரை அறிமுகப்படுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “சில நாட்களுக்கு முன்னால், இதே சேலத்துக்கு வந்த பிரதமர் மோடி, ‘தமிழ்நாட்டில் பாஜகவுக்குக் கிடைக்கும் ஆதரவைப் பார்த்து திமுகவின் தூக்கம் தொலைந்துவிட்டது’ என்று பேசிவிட்டுச் சென்றார்.

மோடியால் உண்மையில் தூக்கத்தைத் தொலைத்தவர்கள் யார் தெரியுமா? பத்தாண்டுகால பாஜக ஆட்சியில் பெட்ரோல் – டீசல் விலையால் பாதிக்கப்பட்ட சாமானிய மக்கள் தான். சிலிண்டர் விலையை உயர்வால் தாய்மார்கள், ஏழைகள் தூக்கத்தை தொலைத்துவிட்டார்கள். வேலையில்லாத் திண்டாட்டத்தால் இளைஞர்கள் தூக்கத்தை தொலைத்துவிட்டார்கள். ஜிஎஸ்டியால் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை நடத்துகின்றவர்கள் தூக்கத்தை தொலைத்துவிட்டார்கள். மூன்று வேளாண் சட்டங்களால் உழவர்கள் தூக்கத்தைத் தொலைத்துவிட்டார்கள்.

தொழிலாளர் விரோத சட்டங்களால் பாட்டாளி மக்கள் தூக்கத்தைத் தொலைத்துவிட்டார்கள். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் சிறுபான்மை மக்கள் தூக்கத்தைத் தொலைத்து விட்டார்கள். சமூக நீதிக்குச் சவக்குழி தோண்டுவதால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின் மக்கள் தூக்கத்தைத் தொலைத்துவிட்டார்கள். இப்படி, பத்தாண்டுகால பாஜக ஆட்சியில் ஒட்டுமொத்த நாடுமே தூக்கத்தைத் தொலைத்துவிட்டு நிம்மதியில்லாமல் தவிக்கிறது. இப்படி நாட்டின் அமைதியையும் – மக்களின் நிம்மதியையும் கெடுத்த பாஜக ஆட்சியை நடத்தும் பிரதமர் மோடி, இன்றைக்கு உச்சநீதிமன்றத்தால் வெளிவந்துள்ள தேர்தல் பத்திர ஊழலால் தூக்கத்தைத் தொலைத்துள்ளார்.

அதுமட்டுமல்ல, இன்னொரு முக்கிய காரணம் இருக்கிறது. அதுதான் பிரதமர் மோடிக்கு மத்திய உளவுத்துறை கொடுத்திருக்கும் “ரிப்போர்ட்” என்று ஒரு செய்தி வருகிறது. அந்தச் செய்தி என்ன? ‘தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு வரைக்கும் தென் மாநிலங்களில் பாஜக வெற்றி பெற முடியாது என்பதுதான் நிலைமையாக இருந்தது. தேர்தல் பத்திர ஊழல் வெளிவந்த பிறகு, வட மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெறாது என்பதுதான் உண்மையான நிலைமையாக இருக்கிறது’ என்று உளவுத்துறை ரிப்போர்ட் சொல்லியிருக்கிறது. இதனாலேயும், பிரதமர் மோடி தூக்கத்தைத் தொலைத்துவிட்டுப் பதற்றப்படுகிறார்.

பதற்றத்தில் என்ன என்ன செய்கிறார்? ஜார்க்கண்ட் மாநிலத்தின் பழங்குடியின முதலமைச்சர் ஹேமந்த் சோரனையும், டெல்லியில் மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் அமலாக்கத் துறையை வைத்து கைது செய்கிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வருமான வரித்துறையை ஏவி விட்டு, நோட்டீஸ் விடுகிறார். எதிர்க்கட்சி எம்.பிக்கள் எதிர்த்துப் பேசினால், சிபிஐ ரெய்டு விடுகிறார். ஒருசில பத்திரிகைகள் இதைப் பற்றி விமர்சிக்கிறார்கள். ஆனால் எதற்கும் பதில் இல்லை. தேர்தல் நேரத்தில், பாஜகவுக்கு இப்படி கூட்டணி கட்சிகளைப் போல், E.D. – C.B.I. – I.T. ஆகியவற்றைப் பிரதமர் பயன்படுத்துகிறார் என்றால், உச்சக்கட்ட தோல்வி பயத்தில் இருக்கிறார் என்று அர்த்தம்.

அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டைப் புண்ணிய பூமியாக மாற்றுவோம் என்று பேசியிருக்கிறார். பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்தீர்கள். தமிழ்நாடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது, இந்தப் புண்ணிய பூமிக்கு ஏன் வரவில்லை? பேரிடர் நிவாரணமாக ஒரு பைசாகூட ஏன் கொடுக்கவில்லை? எய்ம்ஸ் மருத்துவமனையைப் பத்தாண்டுகளாக ஏன் இன்று வரைக்கும் கட்டவில்லை? மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம்கட்டப் பணிக்கு நான்கு ஆண்டுகளாக ஏன் நிதி கொடுக்கவில்லை?

பிரதமர் மோடி அவர்களே… தமிழ்நாடு ஏற்கனவே புண்ணிய பூமியாகத்தான் இருக்கிறது. இங்கு எல்லோரும் சமத்துவமாக – சகோதரர்களாக – ஒற்றுமையாக இருக்கிறோம். அமைதியாக வாழும் தமிழ்நாட்டு மக்களை, மதத்தின் பெயரால் – சாதியின் பெயரால் பிரித்து, குளிர்காயலாம் என்று நினைக்கும் ஒரே கட்சி பாஜக தான். இந்தத் தேர்தல் மட்டுமல்ல, இன்னும் நூறு தேர்தல்கள் நடந்தாலும் உங்கள் நாடகம் தமிழ்நாட்டில் எடுபடாது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், தமிழ்நாடு எப்போதும் புண்ணிய பூமியாகத்தான் இருக்கும்… நாட்டை மத அடிப்படையில் துண்டாட நினைக்கும் பா.ஜ.க. பாவிகளின் மண்ணாக, மாறவே மாறாது.

நான் இன்னும் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறேன்… இங்கு திமுக இருக்கும் வரைக்கும் உங்கள் மோடி மஸ்தான் வித்தையெல்லாம் பலிக்காது. இது, பெரியார் பண்படுத்திய மண். பேரறிஞர் அண்ணாவால் கட்டமைக்கப்பட்ட மண். கருணாநிதியின் மண் இதுபோன்ற எண்ணற்ற பெருந்தலைவர்களின் உழைப்பு ஒருபோதும் வீணாகாது.

“எங்கும் இந்தி - எதிலும் இந்தி” என்று இந்தியைத் திணிப்பதற்கான வேலைகளைக் காலை பார்த்துவிட்டு மாலையில் கண்ணீர் வடிக்கிறார். இதற்குத்தான் சொல்வது… மோடியின் கண்ணீரை அவரின் கண்களே நம்பாது. தமிழர்கள் எப்படி நம்புவார்கள்? ஒருபக்கம் கண்ணைக் குத்திக்கொண்டு, மற்றொருப் பக்கம் கண்ணீர் வடிப்பது என்ன மாதிரியான தமிழ்ப் பாசம்?

அதுமட்டுமா, நேற்று மற்றொன்றையும் பேசியிருக்கிறார்… கேட்டுக் கேட்டுப் புளிச்சுப் போன குடும்ப அரசியல் பல்லவியையே மீண்டும் பாடியிருக்கிறார். ”நாங்கள் அரசியலுக்கு வருவது; மக்களுக்குச் சேவை செய்வதற்குத்தானே தவிர; ஊர் சுற்றுவதற்காக அல்ல” என்று நானும் எத்தனை முறைதான் அவருக்கு விளக்குவது? தி.மு.க. என்பது கோடிக்கணக்கான தமிழ்நாட்டுக் குடும்பங்களை முன்னேற்றுவதற்குப் பாடுபடும் கட்சி. அது மோடிக்குப் புரியவில்லை.

அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு கெட்டுப்போய்விட்டது என்று புதிய அவதூறு பிரச்சாரத்தைக் கிளப்பியிருக்கிறார். அதற்கு ஏதாவது தரவுகளை ஆதாரமாகச் சொல்கிறாரா? இல்லையே. பா.ஜ.க. ஆளும் மணிப்பூர் மாநிலம் பற்றி எரிந்தது. அப்போது நீங்கள் எங்குச் சென்றீர்கள்? அந்த மாநில முதலமைச்சரைக் குறைந்தபட்சம் பதவி விலக வைக்க முடிந்ததா? இதுவரை நடக்காத கொடூரமாக, பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்றார்களே, அப்போது சட்டம்-ஒழுங்கு சந்தி சிரித்ததே… அப்போது ஒரு நாட்டின் பிரதமராக நீங்கள் என்ன செய்தீர்கள்? வாயே திறக்கவில்லையே.

பாஜக ஆளும் மாநிலங்கள் போன்று, சட்டம் - ஒழுங்கு சீர்குலையாமல் சமூக நல்லிணக்கத்துடன் மக்கள் வாழும் அமைதியான தமிழ்நாட்டை உங்களுக்குப் பிடிக்கவில்லையா?என் கையில் ஒரு பட்டியல் இருக்கிறது… நான் ஆதாரத்துடன்தான் பேசுவேன். இதில் இருக்கும் பெயர் பட்டியல் ஏதோ தேசத் தலைவர்களோ… சமூகச் சேவகர்களோ இல்லை… எல்லோரும் சட்டம்–ஒழுங்கைக் கெடுக்கும் ரவுடிகள். சரித்திரப் பதிவேடு (History Sheet) குற்றவாளிகள். ஆனால் இந்தப் பட்டியலில் இருப்பவர்கள் எல்லாம், இப்போது எங்கு இருக்கிறார்கள் தெரியுமா? அத்தனை பேரும் பா.ஜ.க.வில்தான் இருக்கிறார்கள். வழக்கமாக இந்த பட்டியல் காவல் நிலையத்தில்தான் ஒட்டப்பட்டிருக்கும்…

32 பக்கங்கள் கொண்ட இந்தப் பட்டியலில், 1977 வழக்குகள் இருக்கும் 261 ரவுடிகள் இருக்கிறார்கள். இவர்களின் பெயர் என்ன? பா.ஜ.க.வில் என்ன பொறுப்பில் இருக்கிறார்கள்? இவர்கள் மேல் என்ன என்ன பிரிவுகளில் வழக்குகள் இருக்கிறது? என்று இந்தப் பட்டியலில் இருக்கிறது. எல்லா ரவுடிகளையும் உங்கள் கட்சியில் வைத்துக்கொண்டு சட்டம் ஒழுங்கைப் பற்றி நீங்கள் பேசலாமா? உங்களிடம் இருக்கும் உளவுத்துறை மூலமாக அந்தப் புத்தகத்தை வாங்கிச் சரிபார்த்துவிட்டு (”கிராஸ் வெரிஃபை” செய்துவிட்டு,) அதற்குப் பிறகு எங்களைப் பற்றி பேசுங்கள் பிரதமரே

அடுத்து, போதைப் பொருட்கள் பற்றியும் பேசியிருக்கிறார். திமுகவில் இருந்த ஒருவர் மேல் இது தொடர்பாகக் குற்றச்சாட்டு எழுந்ததுமே, அந்த நபரை அடுத்த விநாடியே கட்சியை விட்டு நீக்கிவிட்டோம். அவர் மீதான விசாரணைக்கு நாங்கள் தடையாக இல்லை. இந்த வழக்கை வைத்து, தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகமாக இருப்பது போன்று அவதூறு பரப்புரை செய்கிறார். இது, அவர் இப்போது வகிக்கும் பிரதமர் பதவிக்கு அழகல்ல.

இந்தியாவிற்கே போதைப் பொருள் குஜராத் துறைமுகத்தில் இருந்துதான் வருகிறது என்று பிடிக்கிறார்கள். ஒரு காலத்தில் குஜராத் முதலமைச்சராக இருந்ததே நீங்கள்தானே? இப்போதும் உங்கள் கட்சிதானே அங்கு ஆட்சியில் இருக்கிறது? இது பற்றியாவது வாய் திறப்பீர்களா?

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில்தான் நாட்டிலேயே போதைப் பொருள் அதிகம் விற்பனையாகிறது என்று ஒரு புள்ளிவிவரம் வந்திருக்கிறது… அது எதுவும் நாங்கள் சொன்னது இல்லை. மாநிலங்களவையில் கடந்த டிசம்பர் மாதம் உங்கள் ஆட்சி சார்பில் மத்திய அரசு வைத்த அறிக்கையில் இருக்கிறது. அதுமட்டுமில்லை. போதைப் பொருள் அதிகமாக கைப்பற்றப்பட்ட ‘டாப் 10’ மாநிலங்களில் ஏழு மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சிதான் நடக்கிறது. இந்தப் பத்து மாநிலங்களில் ‘தமிழ்நாடு’ என்ற பெயரே இல்லை. அந்தளவுக்குக் கடுமையான நடவடிக்கைகளை திமுக அரசு எடுத்து வருகிறது.

பிரதமர் மோடி அவர்களே, உங்கள் ஆட்சி அறிக்கையிலேயே இல்லாத தமிழ்நாட்டைப் பற்றி அரசியல் ஆதாயத்திற்காக இப்படி பொய்க் குற்றச்சாட்டை வைக்கிறீர்களே, உங்களுக்குத் தமிழ்நாட்டு மக்கள் மேல் அப்படி என்ன கோபம்? இது மாதிரியான அபாண்டமான குற்றச்சாட்டுகளைச் சொல்லி, தமிழ்நாட்டு மக்களையும் - எங்கள் இளைஞர்களையும் ஏன் அவதூறு செய்கிறீர்கள்?

பிரதமர் அவர்களே, உங்களுக்குச் சொல்லப்படாத ஒரு தகவலைச் சொல்கிறேன். போதைப்பொருள் தொடர்புடைய வழக்குகளில் பாஜகவைச் சேர்ந்த 14 பேர் இங்கு சிறைகளில் இருக்கிறார்கள். அதற்கும் ஆதாரம் இருக்கிறது. இதற்குப் பிரதமர் மோடி என்ன விளக்கம் அளிப்பார்?

இப்படிப்பட்ட மோடி கூட்டணியில் இருந்துகொண்டு, இப்போது அவரின் டைரக்‌ஷனில் கள்ளக் கூட்டணி நாடகம் போடும் பழனிசாமி என்ன செய்கிறார்? காலையில் இந்து நாளேட்டுக்கு ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் ஏன் பா.ஜ.க.வை எதிர்ப்பதில்லை என்று அவர்கள் கேட்டால், தி.மு.க. – தி.மு.க. என்ற தேய்ந்துப்போன பழைய ரெக்கார்டு மாதிரியே பேசிக் கொண்டு இருக்கிறார். பா.ஜ.க.வைப் பற்றியும் - மோடியைப் பற்றியும் பேச, எஜமான விஸ்வாசம் தடுக்கிறதா பழனிசாமி அவர்களே?

உங்கள் தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சிதான் தமிழ்நாட்டின் இருண்ட காலம். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; கொடநாடு கொலை, கொள்ளை, தற்கொலை; பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை; தலைமைச் செயலகத்தில் ரெய்டு; அமைச்சர் மற்றும் டி.ஜி.பி. மீது குட்கா வழக்கு; பெண் எஸ்.பி.க்குப் பாலியல் வன்முறை; சட்டம்–ஒழுங்கு என்பதே இல்லாமல், ஒட்டுமொத்த நிர்வாக இயந்திரமும் முடங்கிய ஆட்சிதான் பழனிசாமியின் ஆட்சி. தான் பதவிசுகம் அனுபவிக்கத் தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்தவர்தான் பழனிசாமி. இப்படிப்பட்ட பழனிசாமிக்கு மக்களும் வாக்களிக்கத் தயாராக இல்லை. உண்மையான அதிமுக தொண்டர்களும் தயாராக இல்லை” என்றார் முதல்வர் ஸ்டாலின்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x