Last Updated : 26 Mar, 2024 07:57 PM

 

Published : 26 Mar 2024 07:57 PM
Last Updated : 26 Mar 2024 07:57 PM

“சிஏஜி குறிப்பிட்ட அந்த 7.5 லட்சம் கோடி ரூபாய் எங்கே?” - பாஜகவுக்கு உதயநிதி கேள்வி @ தி.மலை

திருப்பத்தூர்: “பிரதமர் மோடி தமிழகத்திலேயே தங்கி பிரச்சாரம் செய்தாலும் ஒரு தொகுதியில் கூட பாஜக வெற்றி பெறாது. கடந்த 10 ஆண்டுகளில் ரூ.7/5 லட்சம் கோடி கணக்கில் வரவில்லை என சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழலற்ற ஆட்சி நடத்துவதாக கூறும் பாஜக இதற்கு என்ன பதில் சொல்ல போகிறது” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் திமுக வேட்பாளர்கள் சி.என்.அண்ணாதுரை (திருவண்ணாமலை) டி.எம்.கதிர்ஆனந்த் (வேலூர்) ஆகியோரை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று (செவ்வாய்கிழமை) தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். திருப்பத்தூர் அடுத்த ஆசிரியர் நகர் பகுதியில் தி.மலை திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரைக்கு வாக்கு சேகரித்து அவர் பேசியது: “கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசு என்ன சாதனை செய்து என சொல்ல முடியுமா?

மத்திய, மாநில அரசுகளின் வரவு - செலவு கணக்குகளை அறிக்கையாக வெளியிடும் சிஏஜி அறிக்கையில் மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் ஏழரை லட்சம் கோடி பணம் கணக்கில் வரவில்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழலற்ற ஆட்சி நடத்துவதாக கூறும் பாஜக இதற்கு என்ன பதில் சொல்ல போகிறது?

தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது வராத பிரதமர் மோடி தற்போது தேர்தல் என்பதால் அடிக்கடி தமிழகத்துக்கு வருகிறார். அவர் எத்தனை முறை வந்தாலும் ஒன்றும் நடக்காது. தமிழகத்திலேயே பிரதமர் மோடி தங்கி பிரச்சாரம் செய்தாலும் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றிப்பெறாது. அதற்கு தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகள் ஆகிறது. இதில், தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொனறாக நிறைவேற்றி வ ருகிறார். அதற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. கட்டணமில்லா பேருந்து மூலம் பெண்கள் மாதந்தோறும் ரூ.850 முதல் ரூ.900 வரை சேமிக்கின்றனர். தமிழகத்தில் கட்டணமில்லா பேருந்துக்கு பெண்கள் தான் உரிமையாளர்கள்.

அதேபோல, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகையாக ரூ.1000 மாதந்தோறும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் 3 லட்சம் மாணவிகள் பயன்பெற்றுள்ளனர். மேலும், காலை உணவு திட்டம். 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தரமான உணவு பள்ளிகளில் வழங்கப்படுகிறது. இதனால், பெற்றோர் நிம்மதியாக தங்களது குழந்தைகளைபள்ளிக்கு அனுப்பி வைக்கின்றனர்.

காலை உணவு திட்டம் மூலம் 17லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். இது மட்டுமா? கடந்த செப்டம்பர் மாதம் முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாள் அன்று ‘கலைஞர் மகளிர்உரிமை’ திட்டம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. மாதந்தோறும் பெண்களுக்கு உரிமை தொகையாக ரூ.1000 வழங்கப்படுகிறது. இந்த உதவி தொகை பெற 1 கோடி 60 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.

அதில், தற்போது 1 கோடி 16 லட்சம் பேருக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படுகிறது. மக்களவை தேர்தல் முடிந்த பிறகு விண்ணப்பித்த 1 கோடியே 60 லட்சம் பேருக்கும் மகளிர் உரிமை தொகையாக ரூ.1000 வழங்கப்படும் என்பதை நான் வாக்குறுதியாக கூறுகிறேன். இப்படி திமுகவின் சாதனைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் சி.என்.அண்ணாதுரை தமிழகத்திலேயே 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற தொகுதி மக்கள் அவருக்கு ஆதரவு தர வேண்டும். அப்படி செய்தால் மாதம் ஒரு முறை நான் தி.மலை தொகுதிக்கு வந்து மக்களுக்கு தேவையான எல்லா வசதிகளையும் முன்நின்று செய்து கொடுப்பேன்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிக்கொண்டு இருக்கும்போது அந்த வழியாக ஆம்புலன்ஸ் வாகனம் வந்தது.

ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு வழிவிட வேண்டுமென்பதால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன் பிரச்சாரத்தை அவசர, அவசரமாக முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதைத் தொடர்ந்து, வாணியம்பாடி ஆம்பூர் தொகுதியில் வேலூர் மக்களவை தொகுதி வேட்பாளர் டி.எம். கதிர்ஆனந்தை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x