Published : 26 Mar 2024 05:33 PM
Last Updated : 26 Mar 2024 05:33 PM

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக நீலகிரி அதிமுக, பாஜக நிர்வாகிகள் மீது வழக்கு

உதகை: தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக நீலகிரி அதிமுக மாவட்ட செயலாளர் மற்றும் பாஜக மாவட்ட தலைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட மத்திய இணை அமைச்சரும், நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் மற்றும் அதிமுக வேட்பாளரும் முன்னாள் சபாநாயகரின் மகனுமான லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இரு கட்சியினரும் உதகை நகரில் உள்ள காபி ஹவுஸ் பகுதியிலிருந்து ஊர்வலமாக செல்ல திரண்டனர். அப்போது பாஜகவினருக்கும் அதிமுகவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அதிமுகவினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் ஊர்வலம் செல்ல அனுமதிக்கவில்லை என்று கூறி போலீஸாரின் தடுப்பை மீறி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாகனத்தையும் தாக்கி மோதலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து பாஜகவினரும், அதிமுகவினரும் டிபிஓ சந்திப்பில் மீண்டும் கூடினர். இதனால் அங்கு மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானதால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சுந்தரவடிவேல் உத்தரவின் பேரில் தடியடி நடத்தப்பட்டது. இந்த நடவடிக்கையை கண்டித்து அதிமுகவினரும், பாஜகவினரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகளை மீறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது, பட்டாசு வெடித்தது, போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்தது உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் உதகை மத்திய போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதில் அதிமுக மாவட்ட செயலாளர் கப்பச்சி டி.வினோத் உட்பட 20 அதிமுக முக்கிய நிர்வாகிகள் மீது 4 பிரிவுகளின் கீழும், பாஜக மாவட்ட தலைவர் மோகன்ராஜ் மீது 2 பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x