Published : 24 Mar 2024 04:12 AM
Last Updated : 24 Mar 2024 04:12 AM

சென்னை எழும்பூர் - கடற்கரை 4வது பாதை பணிகளை ஜூலைக்குள் முடிக்க இலக்கு

சென்னை: சென்னை எழும்பூர் - கடற்கரை4-வது புதிய பாதைக்கான பணிகளை வரும் ஜூலைக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் - கடற்கரை இடையே தற்போது இரண்டு பாதையில் புறநகர் ரயில்களும், ஒரு பாதையில் விரைவு மற்றும் சரக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன. கூடுதல் ரயில் பாதை இல்லாததால், அதிக ரயில்கள் இயக்க முடியாத நிலை இருக்கிறது. இதையடுத்து சென்னை எழும்பூர் -கடற்கரை வரை 4-வது பாதை ரூ.280 கோடி மதிப்பில் அமைக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. முக்கியமான இணைப்பு ரயில் திட்டம் என்பதால், பணிகளை விரைந்து முடிக்க ரயில்வே வாரியம் உத்தரவிட்டது.

தற்போது நிலம் கையகப்படுத்துவதில் இருந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளதால், சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது பாதைக்கான பணி கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் தொடங்கியது. பூங்கா நகர் மற்றும் கோட்டை ரயில் நிலையங்களில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை வரும் ஜூலை மாதத்துக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது புதிய பாதைக்கான தடுப்புகள் அகற்றப்பட்டு, பாதை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுபோல கோட்டை, பூங்கா ஆகிய நிலையங்களில் ஏற்கெனவே இருந்த நடைமேம்பால ரயில் பாதைகள் அகற்றப்பட்டு, கூடுதல் நடைமேடைகள் அமைப்பது, மேற்கூரைகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

மேலும், கூவம் ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் பூமிக்கடியில் கம்பிகள் வாயிலாக அடித்தளம் அமைக்கும் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. அடுத்தகட்டமாக, ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெறும். அனைத்து பணிகளையும் ஜூலைக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பிறகு, கடற்கரை - வேளச்சேரிக்கு மீண்டும் மின்சார ரயில்கள் இயக்கப்படும். அதுபோல, எழும்பூர் வழியாக வெளியூருக்கு விரைவு ரயில்களின் சேவையும் அதிகரிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x