Last Updated : 23 Mar, 2024 09:16 PM

 

Published : 23 Mar 2024 09:16 PM
Last Updated : 23 Mar 2024 09:16 PM

மதவாத, வெறுப்பு அரசியலைத் தாண்டி பாஜக ‘சாதி அரசியல்’ செய்கிறது: அதிமுக

கிருஷ்ணகிரி: “பாஜக மதவாத, வெறுப்பு அரசியலைத் தாண்டி தற்போது சாதி ரீதியாக அரசியல் செய்கிறது” என அதிமுக துணை பொதுப் செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி, அதிமுக வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் ஊத்தங்கரை மற்றும் கிருஷ்ணகிரியில் நடந்தது. கிருஷ்ணகிரி அதிமுக மாவட்ட செயலாளர்கள் அசோக்குமார் எம்எல்ஏ (கிழக்கு), பாலகிருஷ்ணா ரெட்டி (மேற்கு) ஆகியோர் தலைமை வகித்தனர். நகர செயலாளர் கேசவன் வரவேற்றார். இதில் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் முனுசாமி பேசியது: “வருகிற மக்களவைத் தேர்தலை உலகளவில் உற்று நோக்குகின்றனர். பாஜக தலைமையில் கடந்த, 10 ஆண்டு மத்தியில் ஆட்சி நடந்துள்ளது. அவர்கள் ஆட்சியில் காவிரி நதிநீர் பங்கீடு உள்ளிட்ட எந்த உதவியும் செய்யவில்லை.

ஆனால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அந்தக் காலத்தில் நீதிமன்றம் வரை சென்று காவிரி நதிநீர் ஆணையத்தை போராடி பெற்றார். அதற்கு முன் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசும், தமிழகத்தின் ஜீவாதாரமான காவிரி நதிநீர் பங்கீடு குறித்து கண்டு கொள்ளவில்லை. அவர்களை நாம் ஏன் கண்டு கொள்ள வேண்டும்.

தேசிய கட்சிகள் தயவின்றி, மாநில கட்சிகளோடு கூட்டணி வைத்துள்ளதை பற்றி அரசியல் விமர்சகர்கள், ஊடகங்கள் விமர்சிக்கின்றன. ஆனால் கடந்த 2014-ம் ஆண்டு இதேபோல் மாநில கட்சிகளோடு மட்டும் கூட்டணி அமைத்து தமிழகத்தில், 40 மக்களவைத் தொகுதிகளில், 38 தொகுதிகளில், அதிமுக வெற்றி பெற்றது. எனவே எங்கள் குரலுக்கு செவி கொடுத்து தீர்வு செய்யும் கட்சிக்கே எங்கள் ஆதரவு. தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்கள் தான் எங்களுக்கு முக்கியம். பாஜக மதவாத, வெறுப்பு அரசியலை தாண்டி தற்போது சாதி ரீதியாக அரசியல் செய்கிறது.

பாமக, ஜான் பாண்டியன் உள்ளிட்டவர்களை கூட்டணி சேர்த்து வாக்கு கேட்கிறார்கள். அடுத்த கட்சிகளை கவிழ்த்து, உடைத்து 4-ம் தர அரசியல் செய்கின்றனர். வட மாநிலங்களில் அது எடுபடும், தமிழகத்தில் எடுபடாது. இடஒதுக்கீடு என்பது அடித்தட்டில், கீழ்மட்டத்தில் இருக்கும் ஒரு சமூகத்தை உயர்த்துவதற்காக என்பதை மறந்து விட்டனர்.

அமலாக்கத் துறை, வருமான வரித் துறையை வைத்துக்கொண்டு மத்திய அரசு மிரட்டுகிறது. 3-வது முறை பாஜக ஆட்சிக்கு வரவேண்டும் என்ற ஒரு குறிக்கோளுக்காக எந்த நிலைக்கும் செல்ல அவர்கள் தயாராக இருக்கிறார்கள். பலமான கூட்டணி பலவீனமான கூட்டணி என்பது கிடையாது. வெற்றி பெறும் கூட்டணியே பலமான கூட்டணி. நாங்கள் பலமாகவே உள்ளோம்.

அதிமுக தலைமையிலான கூட்டணியே வெற்றி பெறும். தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்குள் தான் போட்டி உள்ளது. சில அரசியல் விமர்சகர்கள், ஊடகவியலாளர்கள், பாஜகவுக்கு 15 சதவீதம், 30 சதவீதம் என பேசுகின்றனர். முதலில் இந்தியளவில், 250 இடங்களை பிடிப்பர் என்றனர். பின்னர், 300, 350 என கூறியவர்கள், தற்போது பாஜக 400 இடங்களை பிடிக்கும் என்கின்றனர்.

தேர்தல் முடிந்த பின்பு பாஜக எங்கு இருக்கிறது என்பதை மக்கள் உணர்த்துவார்கள். இருட்டு பயத்தில் சத்தமிட்டு செல்பவர்கள் போல, பயத்தில் பாஜகவினர் பேசி வருகின்றனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கோயம்புத்தூரில் இருந்து தான் ஆரம்பிக்கிறோம் என்கிறார். வருகிற 2026-ல், தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கவே மோடி வருகிறார் என்கிறார்.

அவர்களுக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை. மக்கள் துயரில் உள்ள போது நிதி வழங்க கூட வராமல், அரசு நிகழ்ச்சிக்கு வருவது போல் கட்சி பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அரசு பதவியை துஷ்பிரயோகம் செய்கிறார். தேர்தல் பத்திரம், பாஜக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. விஞ்ஞான முறையில் நூதனமாக செல்வந்தர்களிடமிருந்து பணம் பறிக்க கொண்டு வந்த திட்டம். இதன் மூலம் பாஜக ரூ.6986 கோடி பத்திரமாக வாங்கியுள்ளார்கள்.

தமிழகத்தில் சமூக விரோத செயலில் ஈடுபடும் வகையில் லாட்டரி சீட்டு விற்ற வருவாயை மார்டின் என்பவர் திமுக, பாஜக கட்சிகளுக்கு வழங்கியுள்ளார். எனவே பணத்தை வழங்கக்கூடிய சக்தி படைத்தவர்கள் யார், அவர்கள் தொழில் என்ன என்பதை ஆராய வேண்டும். தமிழக ஆளுநர் அந்த பொறுப்புக்கு தகுதியானவர் அல்ல” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x