Published : 08 Feb 2018 07:00 AM
Last Updated : 08 Feb 2018 07:00 AM
கவிஞர் வைரமுத்து திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு நேரில் வந்து மன்னிப்பு கேட்கக்கோரி மீண்டும் இன்றுமுதல் (பிப். 8) உண்ணாவிரதம் இருக்கப்போவதாக திருவில்லிபுத்தூர் ராமானுஜ ஜீயர் தெரிவித்தார்.
நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: கடந்த மாதம் ராஜபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆண்டாள் தாயார் குறித்து கவிஞர் வைரமுத்து அவதூறாகப் பேசியதைக் கண்டித்தும், ஆண்டாள் கோயிலுக்கு நேரில் வந்து அவர் மன்னிப்பு கேட்கக் கோரியும் நான் உண்ணாவிரதம் இருந்தேன்.
இந்து அறநிலையத் துறை அதிகாரிகள், காவல்துறையினர் அரசு சார்பில் கேட்டுக்கொண்டதால் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது. ஆனாலும், கவிஞர் வைரமுத்து திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு பிப். 3-ம் தேதிக்குள் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையெனில் உண்ணாவிரதத்தை மீண்டும் தொடர்வதாகவும் ஏற்கெனவே அறிவித்திருந்தேன்.
காலக்கெடு முடிந்தும் இதுவரை கவிஞர் வைரமுத்து ஆண்டாள் கோயிலுக்கு நேரில் வந்து மன்னிப்பு கேட்கவில்லை. இதனால், பிப்.8-ல் (இன்று) மீண்டும் உண்ணாவிரதத்தைத் தொடங்குகிறேன். அனைத்து இந்து மக்களும் இதில் பங்கேற்க வேண்டும். கவிஞர் வைரமுத்து ஆண்டாள் கோயிலுக்கு நேரில் வந்து மன்னிப்பு கேட்கும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT