Published : 20 Mar 2024 05:28 PM
Last Updated : 20 Mar 2024 05:28 PM

அனுமதியின்றி பிற மாநிலங்களுக்கு மாடுகள் கொண்டு செல்வதை தடுக்க கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: விலங்குகள் நல வாரியத்தின் உரிய அனுமதி இல்லாமல் மாடுகள் அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்வதைத் தடுக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு அடிமாடுகள் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படுகிறது. இதற்கு தடை விதிக்க கோரி 2002ம் ஆண்டு தொடர்ந்த வழக்கில், உரிய சான்றிதழ் இல்லாமல் மாடுகளை அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு முறையாக பின்பற்றப்படவில்லை எனக்கூறி தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் அஜரான டிஜிபி, உரிய சான்றிதழ்களுடன் மட்டுமே மாடுகளை கொண்டு செல்ல வேண்டும் என சோதனை சாவடிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார்.

ஆனாலும் ஒவ்வொரு வாரமும், ஆயிரக்கணக்கான மாடுகள், உரிய சான்றிதழ் இல்லாமல் அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதே நிலை நீடித்தால் அடுத்த 3 வருடத்தில் நாட்டு மாடு இனங்களே இல்லாத நிலை உருவாகும்.

எனவே விலங்குகள் நல வாரியத்தின் சான்றிதழ் இல்லாமல், மாடுகளை வாகனங்களில் கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் சோதனை நடத்த தமிழக அரசு மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். மீறினால், வாகனங்களை பறிமுதல் செய்து, மீட்கப்படும் மாடுகளை கோ சாலையில் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழக அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x