Published : 16 Mar 2024 07:08 AM
Last Updated : 16 Mar 2024 07:08 AM

அமைச்சர் உதயநிதிக்கு எதிரான அவதூறு வழக்கை நிராகரிக்க கூடாது: உயர் நீதிமன்றத்தில் பழனிசாமி பதில்

இபிஎஸ் | கோப்புப்படம்

சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான அவதூறு வழக்கை நிராகரிக்க கூடாது என்று உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை விமர்சித்து தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 2023 செப். 7-ம் தேதி ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், ‘சனாதனம் என்பதற்கான அர்த்தத்தை பழனிசாமி தேடிக் கொண்டிருக்கிறார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இருந்து தப்பிக்க, அவர் ஒளிந்துகொண்டிருக்கிறார்’ என்று உதய நிதி விமர்சனம் செய்திருந்தார்.

இதையடுத்து, உதயநிதிக்கு எதிராக ரூ.1.10 கோடி மான நஷ்டஈடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பழனிசாமி அவ தூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் பழனிசாமியை தொடர்புபடுத்தி பேசக்கூடாது என உதயநிதி ஸ்டாலினுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து, தனக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று உதயநிதி சார்பில் நிராகரிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதி என்.சதீஷ்குமார் முன்புஇந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பழனிசாமி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘எனக்கு (பழனிசாமி) எதிராக அவதூறாக கருத்து தெரிவித்ததை உதயநிதி ஒப்புக்கொண்டுள்ளார்.

அவர் தெரிவித்தது அவதூறா, இல்லையா என்பது விசாரணை முடிவில்தான் தெரியவரும். எனவே, உதயநிதிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை நிராகரிக்க கூடாது’ என்று கோரப்பட்டிருந்தது. இதையடுத்து, இந்த வழக்கை நீதிபதி ஏப்.5-ம் தேதிக்குத் தள்ளி வைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x