Published : 14 Mar 2024 10:16 AM
Last Updated : 14 Mar 2024 10:16 AM

40-யும் வெல்ல வியூகம்: சிக்கலான இடங்களில் திமுகவே களமிறங்க திட்டம்

தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளையும் வெல்லும் வகையில் வியூகம் அமைத்துள்ள திமுக,கூட்டணி கட்சிகளால் வெல்ல முடியாத,சிக்கலானதாக கருதப்படும் தொகுதிகளில் தங்கள் வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டு அத்தொகுதிகளை பெற நடவடிக்கை எடுத்துள்ளது.

எதிர்க்கட்சியாக இருந்தபோதே 2019 மக்களவைத் தேர்தலில் தேனியைத் தவிர அனைத்து தொகுதிகளையும் வசமாக்கியது திமுக.இந்த முறை, எந்த ஒரு தொகுதியையும் யாரும் பிடித்து விடக்கூடாது என்பதற்காகவே, கூட்டணியில் எந்த கட்சியையும் விட்டுக் கொடுக்காமல், வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது. இந்த தேர்தலில், திமுக நேரடியாக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் கொமதேக மட்டுமே போட்டியிடுகிறது. மதிமுக, விசிக கட்சிகள் தனிச்சின்னத்தில் போட்டியிடுகின்றன. ஐஜேகே விலகியதால், பெரம்பலூர் தொகுதியை திமுக எடுத்துக் கொண்டது. மதிமுகவை பொறுத்தவரை கடந்த முறை ஈரோட்டில் போட்டியிட்டது.

இந்த முறை கொங்கு மண்டலத்தை திமுக வைத்துக் கொள்ள நினைப்பதால் ஈரோட்டில் திமுக போட்டியிடுகிறது. அதற்கு பதில், காங்கிரஸ் வசம் உள்ள திருச்சி அல்லது விருதுநகரை மதிமுக கோரியுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 மற்றும் புதுச்சேரி என 10 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சி கடந்த முறை தமிழகத்தில் போட்டியிட்ட, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, விருதுநகர், ஆரணி, சிவகங்கை, கன்னியாகுமரி, தேனி, கரூர், திருச்சி தொகுதிகளை அப்படியே ஒதுக்கும்படி கேட்டது.

ஆனால், கள நிலவரம், வேட்பாளர்கள் மீதான மக்களின் நம்பிக்கை ஆகியவற்றை சுட்டிக்காடி, இந்த முறை கரூர், ஆரணி, கிருஷ்ணகிரி, திருச்சி, விருதுநகர், சிவகங்கை தொகுதிகளில் சிலவற்றை தங்கள் வசம் வைத்துக் கொள்ள திமுக திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக மதிமுகவுக்கு விருதுநகர் அல்லது திருச்சியை ஒதுக்கினால்,அதற்கு பதில் திமுக வசம் உள்ள தென்காசியை தருவதாகவும், கரூர், தேனிக்கு பதில் மயிலாடுதுறை, கடலூர் தொகுதிகளை தருவதாகவும் பேசி வருகிறது. மேலும், காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படும் தொகுதிகளில் ஏற்கெனவே உள்ள எம்பிக்களுக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘தற்போதைய சூழலில் 40 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தாலும், தொகுதி வாரியான ஆய்வில், சில தொகுதிகளில் வேட்பாளர்களை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இதையே காங்கிரஸ் தலைவர்களிடம் ஆதாரத்துடன் தெரிவித்துள்ளோம். அமைச்சர் உதயநிதி பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ள கொங்கு மண்டலத்தை திமுக கைப்பற்றியே ஆக வேண்டும் என்பதால்,மார்க்சிஸ்ட் வசம் உள்ள கோவை திமுகவுக்கு கேட்டு பெறப்பட்டுள்ளது. காங்கிரஸ், மதிமுகவுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டதும் ஒரு சில தினங்களில் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x