Published : 28 Feb 2018 09:32 PM
Last Updated : 28 Feb 2018 09:32 PM

மருத்துவ மாணவர் கிருஷ்ண பிரசாத்தின் உடல் ராமேசுவரத்தில் அடக்கம்

சண்டிகரில் மர்மமான முறையில் இறந்த மருத்துவ தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் கிருஷ்ண பிரசாத்தின் உடல் ராமேசுவரத்தில் புதன்கிழமை மாலை அடக்கம் செய்யப்பட்டது.

ராமேசுவரத்தைச் சேர்ந்த கிருஷ்ண பிரசாத் (26), சண்டிகரில் செயல்பட்டு வரும் பி.ஜி.ஐ.எம்.இ.ஆர் மருத்துவக் கல்லூரியில் ஊடுகதிர் துறையின் பட்டமேற்படிப்பு முதலாம் ஆண்டு பயின்று வந்தார். திங்கட்கிழமை காலை அவர் தங்கியிருந்த விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரின் உடல் மீட்கப்பட்டு அவர் உடனடியாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக உறுதி செய்தனர். மேலும் அவர் வசித்து வந்த விடுதி அறையை சீல் வைத்து சண்டிகரின் செக்டர் 11 காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து போலீஸார் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக சடலத்தைக் கொண்டு சென்றனர்.

இது தொடர்பாக ராமேசுவரத்தில் உள்ள கிருஷ்ண பிரசாத்தின் பெற்றோருக்கு அவரது நண்பர்கள் மூலம் தகவல் கிடைத்தது கிருஷ்ண பிரசாத்தின் தந்தை ராமசாமி, அவரது குடும்ப உறுப்பினர்கள் திங்கட்கிழமை சண்டிகர் சென்றனர். சண்டிகர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கிருஷ்ண பிரசாத்தின் உடல் செவ்வாய்க்கிழமை பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டு அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சோகத்தில் மூழ்கிய சொந்த பந்தங்கள்

தகவல் அறிந்து கிருஷ்ண பிரசாந்தின் உறவினர்கள் புதன்கிழமை ராமேசுவரத்தில் திரண்டனர். கிருஷ்ண பிரசாத் ரத்த தானம், கிட்னி தானம் மற்றும் உடல் தானம் குறித்து அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆர்வம் காட்டி வந்தார். இது குறித்து சமூக வலைதளங்களிலும் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வார். அவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியாக உள்ளது எனக் கூறினர்.

புதன்கிழமை காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் டாக்டர் கிருஷ்ண பிரசாத்தின் உடல் மதுரை வந்து அங்கிருந்து புதன்கிழமை மாலை 5 மணியளவில் ஆம்புலன்ஸ் மூலமாக ராமேசுவரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மாலை 6 மணியளவில் ஊர்வலமாகப் புறப்பட்டு ராமேசுவரம் சங்குமால் மயானத்தில் உடல் எரியூட்டப்பட்டது.

டாக்டர் கிருஷ்ண பிரசாத்தின் இறுதி ஊர்வலத்தில் ராமேசுவரத்தின் அனைத்துக் கட்சி அரசியல் பிரமுகர்கள், ராமேசுவரம் தீவு மாணவர்கள், ராமநாதசுவாமி கோயில் ஊழியர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

முன்னதாக மருத்துவ மாணவர் கிருஷ்ண பிரசாத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் கே.பழனிசாமி, முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து, அவரது குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x