Last Updated : 10 Mar, 2024 10:09 PM

1  

Published : 10 Mar 2024 10:09 PM
Last Updated : 10 Mar 2024 10:09 PM

‘போதைப் பொருள் கடத்தலை திமுக ஊக்குவிக்கிறது’ - சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு @ வேலூர்

வேலூரில் நடைபெற்ற பாஜக பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட சிவராஜ் சிங் சாவுகான்

வேலூர்: திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் போதைப் பொருட்களை கடத்துவதை ஊக்குவித்து வருகிறது என மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், பாஜகவின் அகில இந்திய துணைத் தலைவருமான சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.

வேலூர் மக்களவை தொகுதி பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் பாஜக சார்பில் வேலூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. கூட்டத்துக்கு, மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், பாஜகவின் அகில இந்திய துணைத் தலைவருமான சிவராஜ் சிங் சவுகான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

அப்போது, அவர் பேசியதாவது, ‘‘உலகத்தின் மிகச் சிறந்த வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா திகழ்கிறது. பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தி வருகிறார். மேலும், தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், கலாச்சாரத்துக்காகவும் பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி உள்ளார். தமிழ் மொழிக்கும், தமிழகத்துக்கும் மோடி முக்கியத்துவம் அளித்து வருகிறார். தமிழகத்தின் வளர்ச்சிக்காக ரூ.2 லட்சத்து 35 ஆயிரம் கோடி நிதி வழங்கி உள்ளார்.

புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டபோது செங்கோலை அடையாளமாக வைத்தார். இது தமிழகத்தின் முக்கியத்துவத்தை குறிக்கிறது. ஜல் ஜீவன் திட்டத்தில் தமிழகத்தில் அனைவருக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வருங்காலத்தில் 50 சதவீத இடஒதுக்கீடு பெண்களுக்கு கிடைக்கும் வகையில் பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

தமிழகத்தில் திமுக ஆட்சியில் பல அமைச்சர்கள் ஊழலில் சிக்கி உள்ளனர். ஒரு அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டை பிளவுபடுத்தும் வகையில் ராகுல் காந்தி யாத்திரை நடத்தி வருகிறார். திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் போதைப் பொருட்களை கடத்தலை ஊக்குவித்து வருகிறது’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், பாஜக மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி, மாநில செயலர் கோ.வெங்கடேசன், மாவட்ட தலைவர்கள் மனோகரன் (வேலூர்), வாசுதேவன் (திருப்பத்தூர்), மாவட்ட பொதுச் செயலர்கள் ஜெகநாதன், பாபு, மகேஷ், தண்டபாணி உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x