Published : 13 Feb 2018 10:24 AM
Last Updated : 13 Feb 2018 10:24 AM
தண்ணீரின்றி கருகும் நெற்பயிர்களைக் காப்பாற்ற வலியுறுத்தி கபினி அணையைத் திறப்பதற்காக கர்நாடக மாநிலத்துக்குள் நுழையும் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக தமிழக விவசாயிகள் இன்று (பிப்.13) கார்களில் புறப்படுவதாக தமிழக காவிரி விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.
தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: காவிரி டெல்டாவில் சுமார் 5 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி பாதிக்கப்பட்டுள்ளன. 2 லட்சம் ஏக்கரில் பயிர்கள் முழுவதும் கருகத் தொடங்கிவிட்டன.
கர்நாடகத்திடம் இருந்து தண்ணீரைப் பெற்றுத் தர பிரதமருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தும் கோரிக்கையை தமிழக அரசு ஏற்க மறுக்கிறது.
கர்நாடகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் ராகுல் காந்தி, தமிழகத்துக்கு தண்ணீர் திறக்குமாறு அம்மாநில முதல்வர் சித்தராமையாவிடம் வலியுறுத்த வேண்டும் அல்லது பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இணைந்து கர்நாடகத்திடம் இருந்து தண்ணீரைப் பெற்றுத் தர வேண்டும்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, ‘கர்நாடக மாநிலத்தில் நுழைவோம், கபினியைத் திறப்போம், கருகும் பயிரைக் காப்போம், காவிரி டெல்டாவை மீட்போம்’ என்ற முழக்கத்துடன் நாளை (பிப்.13) காலை 6 மணியளவில், மன்னார்குடியில் இருந்து 25 கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் புறப்பட்டு தஞ்சாவூர், திருச்சி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி வழியாக ஓசூர் சென்று மாலை 3.30 மணியளவில் கர்நாடக மாநில அணைப் பகுதிக்குச் செல்ல உள்ளோம். வழியில், தமிழக விவசாயிகள், விவசாய சங்கத்தினர் ஆங்காங்கே எங்களுடன் இணைந்து கொள்வர் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT