Published : 13 Feb 2018 10:32 AM
Last Updated : 13 Feb 2018 10:32 AM

தலைமறைவான ரவுடி பினுவைதேடும் பணி தொடர்ந்து தீவிரம்

தலைமறைவாக உள்ள பிரபல ரவுடி பினு மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்யும் பணியை போலீஸார் தீவிரப் படுத்தியுள்ளனர்.

சென்னை பூந்தமல்லியை அடுத்த மலையம்பாக்கத்தில் கடந்த 6-ம் தேதி இரவு பிரபல ரவுடி பினுவின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட 76 பேரை போலீஸார் துப்பாக்கி முனை யில் சுற்றி வளைத்தனர். இதில் 70 ரவுடிகள் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

முக்கிய குற்றவாளியான பினு தப்பியோடினார். அவரைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் தமிழகம் மட்டும் அல்லாமல் அண்டை மாநிலங்களிலும் பினுவைத் தேடி வருகின்றனர்.

பினுவின் கூட்டாளிகளை பிடிக்க தனிப்படை போலீஸார் சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், திண்டிவனம் பகுதிகளிலும் கேரள மாநிலத்திலும் முகாமிட்டுள்ளனர். இவர்களின் புகைப்படம் தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீஸார் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் ரவுடிகள் ஒழிப்புப் பிரிவு போலீஸார் பினுவின் எதிர்தரப்பைச் சேர்ந்த 3 பேரை 2 தினங்களுக்கு முன்தினம் அரும்பாக்கத்தில் கைது செய்தனர். தற்போது சைபர் கிரைம் போலீஸார் உதவியும் கோரப்பட்டுள்ளது. அவர்களும் ரவுடிகள் ஒழிப்புப் பிரிவு போலீஸாருக்கு பினு, கூட்டாளிகளைப் பிடிக்க உதவுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x