Published : 03 Mar 2024 01:25 PM
Last Updated : 03 Mar 2024 01:25 PM

பிரதமர் மோடி நாளை சென்னை வருவதை ஒட்டி 5 அடுக்கு பாதுகாப்பு - காவல்துறை அறிவிப்பு

கோப்புப்படம்

சென்னை: பிரதமர் மோடியின் சென்னை வருகையையொட்டி, சென்னை பெருநகர காவல்துறை சார்பில் 15,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "பிரதமர் நரேந்திர மோடி நாளை (மார்ச் 4) சென்னை, நந்தனம், YMCA மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். பிரதமரின் சென்னை வருகையையொட்டி சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்வது குறித்து, சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், தலைமையில், கூடுதல் காவல் ஆணையாளர்கள், இணை ஆணையாளர்கள் மற்றும் துணை ஆணையாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையர்கள், காவல் இணை ஆணையர்கள், காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து மற்றும் சிறப்பு பிரிவுகளின் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள், ஆயுதப்படை, கமாண்டோ, தமிழ்நாடு சிறப்பு காவல்படை காவல் ஆளிநர்கள் உள்பட 15,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிரதமரின் நிகழ்ச்சி நடைபெறும் சென்னை, நந்தனம், YMCA மைதானம், சென்னை விமான நிலையம், மற்றும் சுற்றுப்புறங்களிலும், சென்னை செல்லும் வழித்தடங்களிலும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தீவிர சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றன. மேலும், சென்னையில் உள்ள லாட்ஜுகள், தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் விடுதிகளிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேக நபர்கள் மற்றும் அந்நிய நபர்கள் உள்ளனரா என கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் தீவிர வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தவிர, சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்களிலும் காவல்துறையினர் மூலம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரதமர் வருகையையொட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரில், குவி.மு.ச. பிரிவு 144ன் கீழ் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டிரோன்கள் (Drones) மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் (Unmanned Aerial Vehicles) பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x