Published : 24 Feb 2024 03:04 PM
Last Updated : 24 Feb 2024 03:04 PM

“விஜயதரணி வருகை தமிழக பாஜகவுக்கு வலுசேர்க்கும்” - அண்ணாமலை வரவேற்பு

சென்னை: “விஜயதரணியை வரவேற்பதோடு, அவரது வருகை, தமிழக பாஜகவுக்கு மேலும் வலுசேர்க்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் இன்று (பிப்.24) பாஜகவில் இணைந்தார். கடந்த சில நாட்களாகவே விஜயதரணி பாஜகவில் இணைகிறார் எனப் பேசப்பட்ட நிலையில், அவர் இன்று டெல்லியில் அதிகாரபூர்வமாக பாஜகவில் இணைந்தார்.

பாஜகவில் கட்சியில் இணைந்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “பிரதமர் மோடியின் தலைமையில் சர்வதேச அளவில் இந்திய தேசம் பல சாதனைகளைப் புரிந்து வருவதால் அவரின் தலைமையில் அரசியல் பணியாற்ற பாஜகவில் இணைந்துள்ளேன்” என்று விளக்கினார்.

இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் இட்ட பதிவில், “காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி, பிரதமர் நரேந்திர மோடியின் சீரிய தலைமையால் கவரப்பட்டு, இன்று பாஜகவில் இணைந்துள்ளார். விஜயதரணியை வரவேற்பதோடு, அவரது வருகை, தமிழக பாஜகவுக்கு மேலும் வலுசேர்க்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, விஜயதரணி பாஜகவுக்கு சென்றது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அளித்தப் பேட்டியில், “விஜயதரணிக்கு கட்சி 3 முறை வாய்ப்பு கொடுத்தது. ஆனாலும் அவர் கட்சி மாறியிருக்கிறார். எங்கிருந்தாலும் வாழ்க” என்று கருத்து தெரிவித்துள்ளார். | வாசிக்க > பாஜகவில் இணைந்தார் விஜயதரணி: காரணம் என்ன?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x